எல்பிஜி நுகர்வோருக்கான காப்பீடு வசதி: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்
வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் உபயோகிப்பாளர்களுக்கு காப்பீடு வசதி அளிக்கப்படுவது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் உபயோகிப்பாளர்களுக்கு காப்பீடு வசதி அளிக்கப்படுவது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மக்களவையில் நீலகிரி தொகுதி அதிமுக உறுப்பினர் சி. கோபாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மக்களவையில் வியாழக்கிழமை பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அவையின் கவனத்துக்குக் கொண்டு வரும் பூஜ்ய நேரத்தில் அவர் முன்வைத்த கோரிக்கை:
நாட்டில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் வெடித்து விபத்துகளில் சிக்கி பல மனித உயிர்கள் பலியாவது, சொத்துகள் சேதமாவது என பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், கடந்த 25 ஆண்டுகளில் எந்த நுகர்வோருக்கும் இந்த விஷயத்தில் காப்பீடு வசதி அளிக்கப்படவில்லை. போதிய விழிப்புணர்வு இல்லாததால் எந்த நுகர்வோரும் காப்பீடு கோருவதற்கு முன்வரவில்லை.
இது போன்ற விபத்துகளில் உயிரிழப்போர் பயன்பெறும் வகையில் காப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்கள் சந்தா பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இதுநாள் வரை எந்த ஆயில் நிறுவனங்களும், எரிவாயு விநியோக முகவர்களும் சந்தா அளிக்கவில்லை. இதனால், பொதுமக்களுக்கு பயன்கள் மறுக்கப்பட்டுள்ளன. விபத்து நிகழ்ந்தால் 30 நிமிடங்களுக்குள் விநியோகஸ்தருக்கு சம்பந்தப்பட்ட நுகர்வோர் உடனியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது எவ்வாறு சாத்தியமாகும்.
மேலும், ஆயில் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு காப்பீடு கோரல் மீதான விதிகள் தெரிவதில்லை. ஆகவே, எல்பிஜி நுகர்வோருக்கு அளிக்கப்படும் காப்பீடு வசதி தொடர்பாக வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.