வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக மாற வேண்டும்: பொறியியல் மாணவர்களுக்கு முதல்வர் அழைப்பு
வேலை தேடுபவர்களாக மாறாமல், வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக மாற வேண்டும் என பொறியியல் மாணவர்களுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேலை தேடுபவர்களாக மாறாமல், வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக மாற வேண்டும் என பொறியியல் மாணவர்களுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தில்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (டிடியு) மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் கேஜரிவால் பேசியதாவது:
இந்தியா ஒர் ஜனநாயக நாடு. ஜனநாயகம் என்பது மக்களைக் குறிக்கிறது. இளைஞர்கள் அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்ட வேண்டும். அரசியலில் ஈடுபட ஏதாவது ஒரு கட்சியில் சேர வேண்டாம். அரசியலை உற்று நோக்குங்கள். நிறைய புத்தகங்களை வாசியுங்கள். யாருடைய அரசியல் சரியானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். விமர்சனப் பார்வையைக் கொண்டிருங்கள். நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்களாக இளைஞர்கள் உள்ளனர்.
அவர்கள் தேச நிர்மாணத்தில் பங்கேற்க வேண்டும். அரசியலை தூய்மைக்கும் பணியிலும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அது வாழ்க்கையை வீணடித்துவிடும். பணமும், பதவியும் நம்மை விட்டுப் போய்விடும்.
அனைவருக்கும் லட்சியம் என்ற ஒன்று இருக்க வேண்டும். நாட்டுக்காக என்ன செய்ய முடியும் என்பதை சிந்தியுங்கள். உங்களுடைய லட்சியத்தை பின்தொடருங்கள். பின்னர் அனைத்தும் உங்களை பின் தொடரும்.
எதிர் வரும் 4 ஆண்டுகள் உங்கள் வாழ்க்கையில் முக்கியப் பங்காற்றும். கடுமையாக உழைத்துப் படியுங்கள். படிப்பதுடன் நிறுத்திக் கொள்ளாதீர்கள். உங்களை மேம்படுத்திக் கொள்ள நேரம் ஒதுக்குங்கள். பாடங்களை படிப்பதுடன் பிற செயல்பாடுகளிலும் ஆர்வம் காட்டுங்கள்.
அடுத்த 4 ஆண்டுகளில் தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். பொறியியல் மாணவர்களான நீங்கள் வேலை தேடுவபர்களாக மாறாமல், வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக மாற வேண்டும் என்றார் முதல்வர் அரவிந்த் கேஜரிவால். இந்நிகழ்ச்சியில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.