கார்கில் முதல் காந்தஹார் வரை.... பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்ட வாஜ்பாய்!
இந்தியாவின் பிரதமராக அடல் பிஹாரி வாஜ்பாய், தான் பதவி வகித்த காலத்தில் கார்கில் சண்டை, காந்தஹார் விமானக் கடத்தல்,
இந்தியாவின் பிரதமராக அடல் பிஹாரி வாஜ்பாய், தான் பதவி வகித்த காலத்தில் கார்கில் சண்டை, காந்தஹார் விமானக் கடத்தல், நாடாளுமன்றம் மீது தாக்குதல் போன்ற பல்வேறு பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டார். ஆனால், தனது ராஜதந்திர நடவடிக்கை மற்றும் ராணுவ பலத்தை சம அளவில் பிரயோகித்து அவர் நாட்டை வழி நடத்தினார்.
கார்கில் போர் நிகழ்ந்த சமயத்தில் பாகிஸ்தானுக்கான இந்தியாவின் தூதராக இருந்த கோபாலஸ்வாமி பார்த்தசாரதி கூறியதாவது: அந்த நிகழ்வு (கார்கில்) நடந்ததை நினைத்துப் பார்க்கிறேன். அப்போது, நான் தில்லிக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன். ராணுவத் தலைமையகத்தில் ஒரு கூட்டம் நடந்தது. விமான பலத்தை பயன்படுத்துமாறு அவர் (வாஜ்பாய்) அனுமதி அளித்திருந்தார். இந்த அனுமதியானது அவராலும், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவாலும் தனிப்பட்ட முறையில் அளிக்கப்பட்டிருந்தது.
அவர் (வாஜ்பாய்) அவர்களிடம் கூறினார். பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்து இருக்கிறது என்பதால்தான் நாம் பாகிஸ்தானுக்கு எதிராக சண்டையிடுகிறோம். அதனால், நீங்கள் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டக் கூடாது. அவர்கள் செய்த தவறை நாமும் செய்யக் கூடாது. ஆமாம், இதன் முடிவில் நாம் வெற்றி பெறுவோம்' என்றார்.
1999-இல் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாஜ்பாய் அரசு தோல்வியடைந்தது. அதன் பிறகு அக்டோபர் மாதத்தில் மீண்டும் வாஜ்பாய் பிரதமராக ஆட்சிக்கு வந்தார். இந்த முறை 1999, டிசம்பரில் அவருடைய அரசு முதலாவதாக பெரிய சவாலை எதிர் கொண்டது.
அப்போது இந்தியன் ஏர்லைன்ஸ் (ஐசி 814) விமானம் 190 பயணிகளுடன் காத்மாண்டுவில் இருந்து புது தில்லிக்கு பறந்து வந்து கொண்டிருந்த போது, பயங்கரவாதிகளால் அப்போது தாலிபான் ஆட்சியில் இருந்த ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹாருக்கு கடத்திக் கொண்டு செல்லப்பட்டது.
கடத்தல்காரர்கள் கோரிக்கைகளை வாஜ்பாய் அரசு ஏற்றது. அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங், பயங்கரவாதிகள் மசூத் ஆஸார், உமர் சயீத் ஷேக், முஸ்தாக் அகமது கர்கர் ஆகியோரை காந்தஹாருக்கு அழைத்துச் சென்றார். பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த பயணிகளை மீட்க பயங்கரவாதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டனர்.
இதே போல வாஜ்பாய் அரசானது மற்றொரு பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொண்டது. 2001, டிசம்பர் 13-ஆம் தேதி இந்திய நாடாளுமன்றம் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் தாக்குதலுக்கு உள்ளானது. நாடாளுமன்ற வளாகத்தின் மீது பயங்கரவாதிகள் 5 பேர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுத் தாக்கினர். இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். நாடாளுமன்றத்தின் மீதான இந்தக் கொடூரமான தாக்குதல் காரணமாக எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படைகளை ஒருங்கிணைத்து சுமார் 11 மாதங்களாக "ஆபரேஷன் பராக்ரம்' என்ற பெயரில் பாகிஸ்தான் துருப்புகளுகளை எதிர்கொண்டது.
இந்த நடவடிக்கை குறித்து பார்த்தசாரதி கூறுகையில், "நாடாளுமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் நடந்த போது, எல்லையில் ராணுவப் படைகளை அவர் (வாஜ்பாய்) ஒன்றுதிரட்டி பாகிஸ்தான் மீது மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தினார். இதன் விளைவாக பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள இடம் பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்பட மாட்டாது என்று அப்போது அதிபராக இருந்த முஷாரஃப் கூறிய பிறகுதான் பேச்சுவார்த்தை தொடங்கியது.
அவர் அமைதிக்காக எந்த நடவடிக்கைக்கும் தயாராக இருந்தார். ஆனால், கார்கில் நிகழ்வின் போது, செய்தது போல நாட்டின் பாதுகாப்பில் ராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் அவர் (வாஜ்பாய்) தயாராக இருந்தார். நாடாளுமன்றம் தாக்கப்பட்ட பிறகே ராணுவம் பயன்படுத்தப்பட்டது என்றார் பார்த்தசாரதி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.