இணைய வர்த்தகத்துக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: சிஏஐடி திட்டம்
இணைய வர்த்தகத்துக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த அகில இந்திய வணிகர்களின்
இணைய வர்த்தகத்துக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த அகில இந்திய வணிகர்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக வரும் ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் சிஏஐடியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவுள்ளதாக அதன் பொதுச் செயலர் பிரவீண் கண்டெல்வால் தெரிவித்தார்.
இணைய வர்த்தகத்துக்கென தனிக் கொள்கையை அறிவிக்க வேண்டும். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுருத்தி, அகில இந்திய வணிகர்களின் கூட்டமைப்பு சார்பில் தில்லியில்புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ய சமாஜ் மார்கில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஏஐடி பொதுச் செயலாளர் பிரவீண் கண்டெல்வால் கலந்து கொண்டு பேசியதாவது:
இணைய வர்த்தகம்: நாட்டில் இணைய வர்த்தகமும், அந்நிய நேரடி முதலீடும் புற்றுநோய் போல சில்லறை வர்த்தகத்தைத் தாக்கி அழித்து வருகின்றன. குறிப்பாக நியாயமற்ற, நேர்மையற்ற முறையை பன்னாட்டு வணிக நிறுவனங்கள் கையாளுகின்றன. இந்த விஷயத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால், இதுவரை உரிய பலன் கிடைக்கவில்லை. எனவே, இதற்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான உத்திகளை வகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வரும் ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிஏஐடியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.
சீலிங் நடவடிக்கை: இதேபோல, தலைநகர் தில்லியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீலிங் நடவடிக்கையால் வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், வெளிமாநிலங்களிலிருந்து வணிகம் செய்ய வருவோர் அச்சமடைந்துள்ளனர். மாஸ்டர் பிளானில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தும், ஆயிரக்கணக்கான கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. சீலிங் நடவடிக்கையில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழு பிடிவாதப் போக்குடன் செயல்படுகிறது. எனவே, சீலிங் நடவடிக்கையைத் தடுக்கும் வகையில், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் சட்டம் இயற்ற வேண்டும் என்றார் பிரவீண் கண்டெல்வால்.
பிரகடனம் வெளியீடு: ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் 16 அம்ச கோரிக்கைகள் அடங்கிய பிரகடனம் வெளியிடப்பட்டது. அதில், சில்லறை வர்த்தகத்துக்கு தனி அமைச்சகம், தேசிய வர்த்தகக் கொள்கை ஆகியவற்றை உருவாக்க வேண்டும். இணையதள வர்த்தகத்துக்கென தனிக் கொள்கையை உருவாக்க வேண்டும். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடாது. நாடு முழுவதும் எளிமையாக்கப்பட்ட ஜிஎஸ்டி முறை வேண்டும். "முத்ரா' திட்டத்தை வணிகர் சங்கங்களின் மூலம் அமல்படுத்த வேண்டும். சிறு வணிகங்களுக்குச் சிறப்பான வங்கிச் சேவை அளிக்கப்பட வேண்டும். வணிகர்களுக்கு விபத்து காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அந்தப் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.