FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 15-க்கு ஒத்திவைப்பு

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையை மே 15-ஆம் தேதிக்கு தில்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையை மே 15-ஆம் தேதிக்கு தில்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த வழக்கு தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்க்ரா ஷெகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது, வி.கே. சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் சார்பில் மூத்த வழக்குரைஞர் மீனாக்ஷி அரோரா ஆஜரானார். அப்போது அவர் முன் வைத்த வாதம்:
எதிர்த்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களில் பல போலியானவை என எங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அந்தக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. இதுபோன்ற போலியான ஆவணங்களைத் தாக்கல் செய்ய அனுமதித்தால், சின்னம் கோரும் வழக்கில் தவறான உதாரணத்தை ஏற்படுத்தும். எதிர்த்தரப்பினர் போலியான ஆவணங்களைத் தாக்கல் செய்தது குறித்து தேர்தல் ஆணையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்க வேண்டும். 
தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் உண்மைத் தன்மையை கண்டறியவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், போலி ஆவணங்களைத் தாக்கல் செய்தவர்கள் மீது தேர்தல் ஆணையம் இந்திய தண்டனைச் சட்டம் 177, 181, 191, 192,193 ஆகிய பிரிவுகளின் கீழ் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்' என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட 7 லட்சம் பிரமாணப் பத்திரங்களின் உண்மைத் தன்மையை அறிய முயன்றால் வாழ்நாள் போதாது. தேர்தல் ஆணையத்தில் இதுபோன்ற சின்னம் ஒதுக்கீடு வழக்கை பிற வழக்கில் உள்ள சட்ட விதிகளைப் பொருத்த முடியாது' என்றார். இதைத் தொடர்ந்து, வழக்குரைஞர் மீனாக்ஷி அரோரா, "இந்த விவகாரத்தில் ஆராய்ந்து தேர்தல் ஆணையம் உத்தரவுப் பிறப்பித்திருக்க வேண்டும்' என்றார். 
வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கு விசாரணையை மே 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
பின்னணி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அணிக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர் 23-இல் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக டி.டி.வி. தினகரன், வி.கே. சசிகலா ஆகியோர் சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் தனித் தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 
அதில், "தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. அந்த உத்தரவை செல்லாதென அறிவிக்க வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தில்லி உயர் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments