பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தினால் கைகுலுக்கத் தயார்
பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்துமானால், இந்திய தங்க மங்கை நீரஜ் சோப்ராவைப் போல, அந்நாட்டுடன் கைகுலுக்கத் தயார் என்று ராணுவத்தின் தலைமை தளபதி விபின் ராவத் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்துமானால், இந்திய தங்க மங்கை நீரஜ் சோப்ராவைப் போல, அந்நாட்டுடன் கைகுலுக்கத் தயார் என்று ராணுவத்தின் தலைமை தளபதி விபின் ராவத் தெரிவித்தார்.
ஆசிய ஒலிம்பிக் போட்டிகளில் ராணுவத்தின் சார்பில் பங்கேற்று பதக்கம் வென்றவர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றபோது ராவத் இவ்வாறு கூறினார்.
அண்மையில் நடந்து முடிந்த ஆசிய ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளில் நீரஜ் சோப்ராவும் ஒருவர். இவர் ஈட்டி எரிதல் போட்டியில் முதலிடத்தைப் பிடித்தார்.
தனக்கு அடுத்த வரிசைகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்ற பாகிஸ்தான் வீராகங்கனை அர்ஷத் நதீமுடன், நீரஜ் சோப்ரா கைகுலுக்கிய காட்சி, சமூக வலைதளங்களில் பிரபலமானது.
இந்தச் சூழலில், நீரஜ் சோப்ராவைப் போல பாகிஸ்தானுடன் கைகுலுக்க இந்திய ராணுவமும் தயாராக உள்ளது என்று விபின் ராவத் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது:
இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டுமானால், அதற்கான முதல் முயற்சியை முதலில் அவர்கள்தான் மேற்கொள்ள வேண்டும். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தினால், நாங்களும் நீரஜ் சோப்ராவைப் போல செயல்பட தயாராக உள்ளோம். காஷ்மீரில் இதற்கு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும், கடந்த ஆண்டில் அமைதிக்கான சூழலில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. இந்த ஆண்டில் அதைக் காட்டிலும் முன்னேற்றம் காணப்படுகிறது.
அதே சமயம், பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகள் தொடரும். பல இளைஞர்களும், அவர்களது குடும்பத்தினரும் இது (பயங்கரவாதம்) சரியான பாதை அல்ல என்பதை உணர்ந்துள்ளார்கள்.
பல இடங்களில், பயங்கரவாத இயக்கங்களில் இணைந்த இளைஞர்களை மீண்டும் திரும்பி வருமாறு அவர்களது தாயார்கள் வலியுறுத்துவதை நான் பார்த்திருக்கிறேன். இதே நிலை தொடருமானால், பயங்கரவாத பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என நான் நம்புகிறேன் என்றார் ராவத்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.