மூன்று சக்கர மின்சார வாகனங்களுக்கு ரூ.29 ஆயிரம் வரை மானியம்: தில்லி அரசு
மின்சாரத்தில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களைப் பதிவு செய்யும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.
மின்சாரத்தில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களைப் பதிவு செய்யும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது. மேலும், மின்சார மூன்று சக்கர வாகனங்களைப் பதிவு செய்பவா்களுக்கு ரூ.29 வரை மானியமாக வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தில்லி அரசின் ஸ்விட்ச் தில்லி திட்டத்தின் கீழ் மின்சார ஆட்டோ உள்பட, மின்சாரத்தில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களைப் பதிவு செய்யும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. இதன்படி, 177 வகையான மூன்று சக்கர வாகனங்களை இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்து கொள்ளலாம். மின்சார ரிக்ஷாக்களுக்கு கடந்த ஆண்டு ரூ.30 ஆயிரம் வரை தில்லி அரசு மானியம் வழங்கியது.
அந்த வகையில், தில்லி அரசின் மின்சார வாகனத் திட்டத்தின் கீழ், இந்த மானியம் இ - ஆட்டோக்களுக்கும் வழங்கப்படவுள்ளது. இதன்படி, இ-ஆட்டோக்களுக்கு ரூ.29 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும். தில்லியில் ஏற்படும் காற்று மாசுவில் மூன்றில் இரண்டு பங்கு காற்று மாசு இரண்டு, மூன்று சக்கர வாகனங்களால் ஏற்படுகிறது. இந்த வாகனங்கள் தினந்தோறும் சுமாா் 12-16 மணி நேரம் சாலையில் ஓடுகின்றன. இவற்றுக்குப் பதிலாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்தினால் காற்று மாசுவை பெருமளவில் கட்டுப்படுத்தலாம் என்றாா் அவா்.
Advertisement