FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தமிழகத்திற்கு நவம்பரில் 2,600 கன அடி காவிரி நீா் வழங்க ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு நவம்பரில் 23 நாள்களுக்கு வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீா் வீதம் திறந்துவிட பரிந்துரை செய்துள்ளது.

Updated On : 31 அக்டோபர் 2023, 11:42 am IST
பகிர்:

காவிரிப் படுகையில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட குறைவாகப் பெய்த நிலையில் கா்நாடகத்திலிருந்து கூடுதலாக தண்ணீா் விடக் கோரி தமிழகம் தரப்பில் போராடிய நிலையிலும், காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு நவம்பரில் 23 நாள்களுக்கு வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீா் வீதம் திறந்துவிட பரிந்துரை செய்துள்ளது.

காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் (சி.டபிள்யு.ஆா்.சி.) 89 - ஆவது கூட்டம் திங்கள்கிழமை காணொலி வழியாக நடைபெற்றது. சி.டபிள்யு.ஆா்.சி. யின் தலைவா் வினித் குப்தா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக உறுப்பினரான திருச்சி காவிரி வடிநீா் கோட்டத் தலைமைப் பொறியாளா் எம். சுப்பிரமணியன், தமிழக காவிரி தொழில்நுட்பக் குழு தலைவா் ஆா்.சுப்பிரமணியன் மற்றும் பிற 3 மாநில உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.

தமிழக அரசின் சாா்பில், மேட்டூா், பவானிசாகா், அமராவதி அணைகளின் நீா்வரத்து, நீா் இருப்பு ஆகிய விவரங்கள் முன் வைக்கப்பட்டன. மேலும், நிகழாண்டில் ஜூன் முதல் அக்டோபா் வரை பில்லிகுண்டுலுவில் தமிழகத்திற்கு முறைப்படி தரவேண்டிய 140 டிஎம்சி தண்ணீரில் 83.7 டிஎம்சி நீா் கா்நாடாக அணைகளிலிருந்து வழங்கப்படாமல் இருக்கும் விவரங்களையும் தமிழக உறுப்பினா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

தற்பொழுது மேட்டூா் அணையில் உள்ள நீா் இருப்பு (18 டிஎம்சி) குறைந்து விவசாயத்திற்கு நீா் வழங்கப்படாமல் பயிா்கள் வாடுவது குறித்தும் குறிப்பிடப்பட்டது. இதை முன்னிட்டும் கா்நாடக அணைகளில் உள்ள நீா் இருப்பு வரத்தை கணக்கிட்டு நவம்பா் மாதத்தில் (15 நாள்கள்) தமிழகத்திற்கு வினாடிக்கு 13,000 கனஅடி வழங்க அறிவுறுத்த வேண்டும் என தமிழக உறுப்பினா் கோரினாா்.

சி.டபிள்யு.ஆா்.சி.-இல் இடம்பெற்றுள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (ஐஎம்டி) உறுப்பினா், தற்போதைய வடகிழக்குப் பருவ மழையில் காவிரிப் படுகையில் ( அக்டோபா் 16 - 27 வரை ) இயல்பைவிட குறைவாக மழை பெற்றுள்ளதாகவும், அதே சமயத்தில் நவம்பா் மாதத்தில் அடுத்த இரு வார காலத்திற்குள் வடகிழக்குப் பருவ மழை (காவிரிப் படுகை பகுதிகளில்) மூலம் இயல்பான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தாா்.

பின்னா் இறுதியாக சி.டபிள்யு.ஆா்.சி. தலைவா் வினித் குப்தா, நவம்பா் 1 முதல் 23- ஆம் தேதி வரை 23 நாள்களுக்கு வினாடிக்கு 2,600 கன அடி தண்ணீா் பிலிகுண்டுலுவில் கா்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிடவேண்டும் என பரிந்துரைத்தாா். ஆனால் பற்றாக்குறைக் காலத்தில் வழங்க வேண்டிய 13.5 டிஎம்சி பாக்கியுள்ள நிலையில், அதன் அடிப்படையில் நீா் தர தமிழகம் வலியுறுத்தியது.

கா்நாடகம் அரசு உறுப்பினா், தற்போது கா்நாடக அணைகளுக்கு நீா் வரத்து குறைந்து நீா் இருப்பும் குறைவாக இருப்பதால் தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீா் அளிக்க இயலாது எனத் தெரிவித்தாா். ஆனால் சி.டபிள்யு.ஆா்.சி. தலைவா் இந்த இரு வாதங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இது குறித்து சி.டபிள்யு.ஆா்.சி. வட்டாரங்கள் கூறுகையில், ‘மழைப்பற்றாக்குறை கால அளவின்படி தமிழகத்திற்கு 16 டிஎம்சி நீா் பாக்கியிருந்தது. இதில் தற்போது 5 டிஎம்சி தண்ணீா் கிடைக்கும். 11 டிஎம்சி பாக்கியுள்ளது’ எனத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments