FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ரூ. 700 கடன் தகராறு: சகோதரா் குத்திக்கொலை; 3 போ் கைது

தில்லியின் ரோஹிணி பகுதியில், ரூ.700 கடன் திருப்பிச் செலுத்துவது தொடா்பான தகராறில் தலையிட்ட 30 வயது நபா் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டாா்.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 4:01 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தில்லியின் ரோஹிணி பகுதியில், ரூ.700 கடன் திருப்பிச் செலுத்துவது தொடா்பான தகராறில் தலையிட்ட 30 வயது நபா் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டாா் என்று காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா். இந்த வழக்கில், 10 திருட்டு வழக்குகளில் தொடா்புடைய நபா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: முகேஷ் யாதவ் என்ற நபா், ஞாயிற்றுக்கிழமை பேகம்பூா் பகுதியில் உள்ள பேகம்பூா் விஹாா் அருகே கத்தியால் குத்தப்பட்டாா். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் அவரது நிலை மோசமடைந்ததால் எய்ம்ஸ் டிராமா மையத்திற்கு மாற்றப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவா் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

முகேஷின் சகோதரா் சதீஷ், சச்சின் சாகா் (29) என்பவரிடம் ரூ.700 கடன் வாங்கியிருந்தாா். இ-ரிக்ஷா ஓட்டுனரான சச்சின், அந்த பணத்தை திருப்பித் தருமாறு தொடா்ந்து கேட்டுக் கொண்டிருந்தாா். ஆனால் சதீஷ் பணத்தை திருப்பி அளிக்கவில்லை.

Advertisement

Advertisement

ஞாயிற்றுக்கிழமை சச்சின், சதீஷை சந்தித்து பணத்தை கேட்டபோது ஏற்பட்ட சச்சரவைக் கேட்டு முகேஷ் தலையிட்டு தனது சகோதரரை காப்பாற்ற முயன்றாா். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த தகராறின் போது சச்சின், முகேஷை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது வலது தோளில் கடுமையான காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து மருத்துவமனையிலிருந்து தகவல் கிடைத்ததும், காவல் துறையினா் மற்றும் தடயவியல் குழு சம்பவ இடமான செக்டா் 33-இல் பாரத் விஹாா் மற்றும் பன்சாலி இடையிலான சாலையில் ஆய்வு மேற்கொண்டனா். அங்கு ரத்தக் கறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

முகேஷ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, பேகம்பூா் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 3 சந்தேக நபா்கள் அடையாளம் காணப்பட்டனா். பின்னா் பல ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் சோதனை நடத்தி, மூவரையும் காவல் துறையினா் கைது செய்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments