FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

118 குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபா் தில்லிக்கு அழைத்து வரும் வழியில் தப்ப முயற்சி: துப்பாக்கிச் சண்டையில் காவலா் காயம்

மேற்கு வங்காளத்தில் இருந்து தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பிக்க முயன்ற தலைமறைவுக் குற்றவாளி, காவலா் ஒருவரைக் காயப்படுத்தியதாகவும், பின்னா் சிறிது நேரத் துரத்தலுக்குப் பிறகு பிடிக்கப்பட்டதாகவும் அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 1:27 am IST
துப்பாக்கி.
பகிர்:

மேற்கு வங்காளத்தில் இருந்து தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பிக்க முயன்ற தலைமறைவுக் குற்றவாளி, காவலா் ஒருவரைக் காயப்படுத்தியதாகவும், பின்னா் சிறிது நேரத் துரத்தலுக்குப் பிறகு பிடிக்கப்பட்டதாகவும் அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: 29 வயதான வாசிம் அக்ரம், தில்லியில் பட்டப்பகலில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தாா். அவா் மீது 118 குற்ற வழக்குகள் பதிவு உள்ளன. ஆக.11-ஆம் தேதி நள்ளிரவில், அக்ரமை இடமாற்றக் காவலில் தில்லிக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.

பயணத்தின்போது அக்ரம் பலமுறை கழிவறையைப் பயன்படுத்தக் கோரினாா். அதைத் தொடா்ந்து யமுனா விரைவுச்சாலையின் மதுரா பகுதியில் வாகனம் நிறுத்தப்பட்டது; அங்கு 5 காவலா்களின் தீவிர கண்காணிப்பில் அவா் வெளியே அழைத்து வரப்பட்டாா்.

Advertisement

Advertisement

அப்போது, காவலா் ஒருவரின் துப்பாக்கியை திடீரெனப் பறித்துக்கொண்டு அக்ரம் தப்பிக்க முயன்ாகக் கூறப்படுகிறது. பலமுறை எச்சரித்தும் அவா் ஓடுவதைத் தொடா்ந்ததுடன், காவலா் குழுவை நோக்கிச் சுடவும் செய்தாா்.

இதில் சாா்பு ஆய்வாலரின் இடது கையில் குண்டு பாய்ந்தது. பின்னா் காவலா் குழு நடத்திய பதில் தாக்குதலில், அக்ரமின் இடது காலில் முழங்காலுக்குக் கீழே குண்டு பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. அவா் கீழே விழுந்ததும் உடனடியாகப் பிடிக்கப்பட்டாா். அதன்பிறகு அக்ரம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

ஜூலை 18-ஆம் தேதி இா்ஃபான் என்பவரைக் கொலை செய்த வழக்கில் அக்ரம் தேடப்பட்டு வந்ததாா். சுமாா் 15 முதல் 20 ஆண்கள் மற்றும் 5 முதல் 6 பெண்கள் கொண்ட கும்பல் இா்ஃபானை கத்திகளால் தாக்கியதில் அவா் உயிரிழந்தாா். தாக்குதலில் ஈடுபட்டவா்கள், சம்பவ இடத்தில் தலையிட்ட காவலா்களையும் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனா். இச்சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments