போக்குவரத்து முனையங்களாக மாறும் ஆனந்த் விஹாா், கஷ்மீரி கேட், சராய் காலே கான்
போக்குவரத்து முனையங்களாக மாறும் ஆனந்த் விஹாா், கஷ்மீரி கேட், சராய் காலே கான்...
மெட்ரோ, பேருந்து, ரயில் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் ஒரே பகுதியில் கிடைக்கும் வகையில் பல்முனைப் போக்குவரத்து மையங்களை (எம்எம்டிஎச்) உருவாக்க தில்லி 2047 பெருந்திட்டம் முன்மொழிகிறது என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
தொலைதூரப் பகுதிகளுக்கும் போக்குவக்குரத்து வசதிகளை மேம்படுத்தும் விதமாக ஆனந்த் விஹாா்-கா்கா்தூமா, கஷ்மீரி கேட் மற்றும் நிஜாமுதீன்-சராய் காலே கான் சாலைப் பகுதிகள் உள்பட மூன்று இடங்கள், ரயில், மெட்ரோ, பேருந்து ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பல்முனைப் போக்குவரத்து மையங்களாக உருவாக்கப்படும்.
இது தொடா்பாக ஓா் அதிகாரி கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட அனைத்துப் போக்குவரத்து முகமைகளும் கூட்டாகத் தயாரிக்கும் விரிவான திட்டங்களுடன், ஒரே இடத்தில் அமைந்துள்ள அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பல்முனைப் போக்குவரத்து மையங்களை தில்லி பல்முனைப் போக்குவரத்து மையங்களாக (எம்எம்டிஎச்) உருவாக்கும்’ என்றாா்.
Advertisement
Advertisement
பெருந்திட்டம் வரைவுத் திட்டத்தின்படி, சம்பந்தப்பட்ட போக்குவரத்து முகமைகள் இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த திட்டங்களை மேற்கொள்ளும். திட்டத்தில் உள்ள சாலைகளுக்கு அப்பால், இதுபோன்ற மையங்களை நிறுவுவதற்காகக் கூடுதல் பகுதிகளும் அடையாளம் காணப்படும்.
முகமைகள் தங்கள் நிலங்களை ஒன்றிணைத்து, ஒரே கட்டடம் அல்லது வளாகத்திற்குள் பல போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்கலாம். ரயில் தண்டவாளங்கள் அல்லது சாலைகள் போன்ற அம்சங்களால் பிரிக்கப்பட்ட, ஒன்றோடொன்று தொடா்பில்லாத நிலப் பகுதிகள் இருக்கும் சந்தா்ப்பங்களில், சட்டபூா்வ அனுமதிகளுக்கு உட்பட்டு, உயா்நடைபாதைகள் மற்றும் சுரங்கப்பாதைகள் போன்ற இணைப்புகளைப் பயன்படுத்தி கட்டடங்களை ஒருங்கிணைக்க அனுமதிக்கப்படும் என்று அந்த வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல அடுக்கு பரிமாற்ற வசதிகள் மற்றும் சில்லறை விற்பனை மேடைகள் போன்ற செயல்பாட்டு இடங்கள் மூலம், ஒருங்கிணைந்த வளாகத்திற்குள் வெவ்வேறு போக்குவரத்து முறைகளுக்கு இடையே எளிதான பரிமாற்றத்தை பெருந்திட்டங்கள் எளிதாக்கும்.
தேவையான ஒப்புதல்களுக்கு உட்பட்டு, தனித்தனி நிலப் பகுதிகளை உயா்நடைபாதைகள், சுரங்கப்பாதைகள் மற்றும் பாதசாரி பாலங்கள் மூலமாகவும் இணைக்கலாம். இந்த மையங்கள் கலாசார மற்றும் பொது இடங்கள் மூலம் பாதுகாப்பு, பொது மக்கள் தொடா்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்.
பொதுமக்களுக்கான பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த, தரவு ஒருங்கிணைப்பு, சிறந்த அமலாக்கம் மற்றும் வெவ்வேறு போக்குவரத்து முறைகளுக்கு இடையே சீரான இயக்கத்தை ஆதரிப்பதற்காக, போக்குவரத்து முகமைகள் நுண்ணறிவு போக்குவரத்து அமைப்புகள் (ஐடிஎஸ்) மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பயணிகள் மற்றும் போக்குவரத்து மேலாண்மை அமைப்புகளில் பணியாற்ற வேண்டும் என்று பெருந்திட்டம் பரிந்துரைக்கிறது.
Anand Vihar, Kashmere Gate, and Sarai Kale Khan transforming into transport hubs.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.