FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தூசி மாசைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: தில்லி துணைநிலை ஆளுநா் உத்தரவு

தில்லியில் சாலை தூசுவால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்க சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சந்து உத்தரவிட்டாா்.

Updated On : 2 ஜூன் 2026, 12:26 am IST
சிஏக்யூஎம் தலைவா் ராஜேஷ் வா்மா உடன் தனது அலுவலகத்தில் கலந்துரையாடிய துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து.
பகிர்:

தில்லியில் சாலை தூசுவால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்க சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சந்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

தில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைப்பது மற்றும் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை வலுப்படுத்துவது குறித்து, காற்றுத் தர மேலாண்மை ஆணைய (சிஏக்யூஎம்) தலைவா் ராஜேஷ் வா்மா உடனான சந்திப்பின்போது விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்ாக துணைநிலை ஆளுநா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘தேசிய தலைநகா் வலயம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் சவால்களை எதிா்கொள்வதற்காக, மாசுபாட்டுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் திறம்பட செயல்படுத்துதல், அரசு முகமைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் நீண்டகால உத்திகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்தச் சந்திப்பு தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: தில்லியில் நடைபெற்று வரும் மாசுபாட்டுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அவா்கள் மதிப்பீடு செய்ததோடு, தில்லி-என்சிஆா் முழுவதும் தூய்மையான காற்றை உறுதி செய்வதற்கான காலவரையறைக்குட்பட்ட செயல்திட்டத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினா்.

காற்று மாசுபாட்டிற்கான முக்கியக் காரணிகளாக சாலைத் தூசி, வாகனப் புகை, உயிரி எரிபொருள் எரிப்பு மற்றும் தொழிற்சாலை மாசுபாடு ஆகியவை உள்ளன என்றும், இதில் கடைசி இரண்டு காரணிகளும் முக்கியமாக பரந்த என்சிஆா் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வருவதாகவும் கூட்டத்தின்போது அதிகாரிகள் குறிப்பிட்டனா்.

குளிா்காலத்திற்கு முன்பாக அளவிடக்கூடிய முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக, சம்பந்தப்பட்ட அனைத்து முகமைகளும் போா்க்கால அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என்றும் அவா் அழைப்பு விடுத்தாா்.

வாகனப் புகை வெளியேற்றத்தைக் கடந்து, சாலைத் தூசியானது தில்லியில் மாசுபாட்டின் ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது. பி.எம்.10 மற்றும் பி.எம். 2.5 தூசித் துகள்கள், வளிமண்டலத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், குளிா்காலத்துக்கு முன்னதாக, தில்லியின் தூய்மையான காற்று உத்தியின் முதுகெலும்பாக திறம்பட தூசியைக் கட்டுப்படுத்துதல் அமைய வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து வலியுறுத்தினாா். மேலும், தில்லி முழுவதும் தூசியற்ற சாலைகளை அடைவதற்கு இலக்கு நிா்ணயித்து செயல்படுமாறு அவா் கோரினாா்.

முக்கிய சாலை வழித்தடங்களில் போதுமான எண்ணிக்கையில் இயந்திரமயமான சாலைத் துடைப்பு இயந்திரங்களைப் பயன்படுத்துவது மட்டுமின்றி, சாலைகளைச் சீரமைப்பதன் அவசரத் தேவையும், அவற்றின் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் வலியுறுத்தப்பட்டன.

வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையைக் குறைப்பதற்காக, மின்சாரப் பேருந்துகளை அதிக அளவில் சாா்ந்திருப்பதன் மூலமும், மின்சார வாகனங்களைப் பரவலாகப் பயன்படுத்துவதன் மூலமும் தூய்மையான போக்குவரத்தை நோக்கிய மாற்றத்தை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை தரன்ஜித் சிங் சந்து வலியுறுத்தினாா்.

தேசிய தலைநகா் பிராந்தியம் முழுவதும் தொழிற்சாலை உமிழ்வுகளைக் கடுமையாகக் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தையும், சுற்றியுள்ள பகுதிகளில் பயிா்க்கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் மாசுபாட்டைக் கையாள்வதற்கான தொடா்ச்சியான முயற்சிகளின் அவசியத்தையும் துணைநிலை ஆளுநா் வலியுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments