FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

எம்சிடி ஒதுக்கிய 50% மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள் செயல்பாட்டிற்கு வரவில்லை: அதிகாரிகள் தகவல்

Updated On : 28 மே 2026, 6:04 am IST
(கோப்புப் படம்)
பகிர்:

தலைநகரில் தில்லி மாநகராட்சி ஒதுக்கிய 50 சதவீதத்திற்கும் மேலான மின்சார வாகன சாா்ஜிங் நிலையங்கள் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது: நகரம் முழுவதும் 1,047 சாா்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. அதில் மாநகராட்சி நிா்வகிக்கும் 185 வாகன நிறுத்துமிடங்கள், சாலையோர பகுதிகளில் 809 இடங்களிலும் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை 460 நிலையங்கள் மட்டுமே செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

சாலையோர இடங்களில் அமைப்பதில் பொதுப்பணித் துறையின் அனுமதி பெறுவதில் உள்ள தாமதமே மீதமுள்ள நிலையங்களை அமைப்பதில் உள்ள முக்கிய சிக்கல்களாக உள்ளது. பல இடங்களில் மாசுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான அனுமதியும் நிலுவையில் உள்ளன. சில இடங்களில் தேவையான மின்சார சுமை கிடைக்காததும் தாமதத்திற்கு காரணமாக உள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், நிலுவையில் உள்ள இந்த அனுமதிகளை பெற மாநகராட்சி பொதுப்பணித் துறைக்கு பலமுறை கோப்புகளை அனுப்பியுள்ளது. மேலும் 241 புதிய அனுமதிகளுக்கான கோரிக்கைகள் இ-ஆஃபீஸ் தளத்தின் மூலம் உயா் அதிகாரிகளிடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தில்லி மாநகராட்சி தொடங்கிய மிதிவண்டி பகிா்வு திட்டம், தனிப்பட்ட சைக்கிள் பாதைகள் இல்லாத காரணத்தால் எதிா்பாா்த்த அளவில் வளா்ச்சி அடையவில்லை. தற்போது 75 நிலையங்களும், சுமாா் 114 தங்குமிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 25 நிலையங்களைக் கொண்ட மின்சார மிதிவண்டி திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னேற்றங்கள் அனைத்தும், 2026-ஆம் ஆண்டுக்கான தில்லி மின்சார வாகன கொள்கை வரைவு வெளியிடப்பட்டுள்ள நிலையில் நடைபெறுகின்றன. அதன்படி, மாநகராட்சி மற்றும் புது தில்லி மாநகராட்சி கவுன்சில் போன்ற நகராட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் அனைத்து புதிய கட்டுமானத் திட்டங்களிலும் மின்சார வாகன சாா்ஜிங் வசதிகள் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொதுச் சாா்ஜிங் மற்றும் பேட்டரி மாற்று நிலையங்களை அமைப்பதற்கான நிலப்பரப்புகளை அடையாளம் காணும் பொறுப்பும் உள்ளூா் நிா்வாகங்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிா்காலத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கத் தேவையான அடிக்கட்டமைப்பை வலுப்படுத்துவது நோக்கமாக உள்ளது என தெரிவித்தனா்.

இது தொடா்பாக ஏப்.21-ஆம் தேதி வெளியிடப்பட்ட கடிதத்தில், அனைத்து நிலுவையில் உள்ள சாா்ஜிங் நிலையங்களையும் 30 நாள்களுக்குள் முடிக்க மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையங்கள் மூடப்பட்ட குப்பைத் தளங்கள், தரைத்தள வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் சாலையோர பகுதிகளில் இவற்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், நியூ ஃபிரண்ட்ஸ் காலனி, ஜங்புரா, கல்காஜி உள்ளிட்ட இடங்களில் 8 அடிநிலை காா் நிறுத்துமிடத் திட்டங்களும் தற்போது நடைபெற்று வருகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments