படகு விபத்தில் மாயமான 9 பேரை மீட்க வலியுறுத்தி ஆட்சியரிடம் உறவினர்கள் மனு
கேரள மாநிலத்தில் நிகழ்ந்த படகு விபத்தில் காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்களின் உறவினர்கள் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
கேரள மாநிலத்தில் நிகழ்ந்த படகு விபத்தில் காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்களின் உறவினர்கள் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
கேரள மாநிலம் முனம்பம் பகுதியில் யேசுபாலன் என்பவர் உள்பட 14 பேர் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த சரக்கு கப்பல் படகின் மீது மோதிய விபத்தில், குமரி மாவட்டம், ராமன்துறை, முள்ளூர் துறையைச் சேர்ந்த யோக்கோபு, யுகநாதன், சகாயராஜ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
மேலும், கடலில் மாயமான ராமன்துறையச் சேர்ந்த யேசுபாலன், ராஜேஷ்குமார், ஆரோக்கிய தினேஷ், ஷாலு, முள்ளூர்துறையைச் சேர்ந்த சகாயராஜ், கீழ மணக்குடியைச் சேர்ந்த அருண்குமார், பால்சன் மரியராஜ் உள்ளிட்ட 9 பேரை தேடும் பணி 3ஆவது நாளாக வியாழக்கிழமையும் நீடித்தது.
இந்நிலையில் படகு விபத்தில் மாயமான மீனவர்கள் 9 பேரின் உறவினர்கள் மற்றும் மீனவ அமைப்பினர், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணியை துரிதப்படுத்த வேண்டும். கப்பல் மோதியதும் படகின் அடித்தளத்தில் இருந்தவர்கள் கடலின் ஆழமான பகுதிக்கு செல்ல வாய்ப்புள்ளதால், பயிற்சி பெற்ற நீர் மூழ்கி வீரர்களை கொண்டு தேடுதல் பணியை தீவிரப்படுத்த வேண்டும். விபத்துக்கு காரணமான கப்பல், கேப்டன் மீது வழக்கு பதிவு செய்வதோடு, பலியான மீனவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.