குமரி தொழிலாளி மீதான போக்சோ வழக்கு ரத்து
குமரி மாவட்டம், அருமனை அருகே மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூலித் தொழிலாளி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு,
குமரி மாவட்டம், அருமனை அருகே மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூலித் தொழிலாளி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு, மகளின் வாக்குமூலத்தையடுத்து செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டது.
அருமனை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி ஒருவர் தனது 10 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அண்மையில் மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
சிறுமியின் தாய்வழி பாட்டி மூலம் அளிக்கப்பட்ட இப் புகார் மீது மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பார்வதி, உதவி ஆய்வாளர் பிரேமா ஆகியோர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி முன்னுக்குப் பின் முரணாக தெரிவித்தாராம். இருப்பினும் சிறுமி பாலியல் தொடர்பான புகார் என்பதால், புகாரின் மீது அலட்சியம் காட்ட வேண்டாம் எனக் கருதிய போலீஸார் சிறுமியின் தந்தை மீது போக்சோ சட்டப்படி வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். பின்னர் தந்தையையும், மகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து சிறுமியிடம் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. அப்போது தனது தந்தை தன்னிடம் தகாத முறையில் நடக்கவில்லை என்றும், தனது தாய்வழி பாட்டி வற்புறுத்தலின் பேரில் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார்.
சிறுமியின் வாக்குமூலத்தை நீதிமன்றம் காவல்துறைக்கு சமர்ப்பித்தது. இதைத் தொடர்ந்து தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு ரத்து செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.