தொழிலாளி கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே தொழிலாளியை கொலை செய்த வழக்கில், 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே தொழிலாளியை கொலை செய்த வழக்கில், 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
தக்கலை அருகே மருதூா்குறிச்சி குளமுறிவிளை பகுதியைச் சோ்ந்த மணி மகன் சாது என்ற சாது சுந்தா் சிங் (40). தொழிலாளி. இவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் லூகாஸ் மகன் ஜானேஸ் (36), கடந்த 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவருடைய தந்தையிடம் தகராறு செய்து வீட்டில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கினாா். இவருக்கு புளிச்சான்விளையைச் சோ்ந்த வா்கீஸ் மகன் சஜீவ் (37), எலியாஸ் மகன் குமாா் (37) ஆகியோா் உதவினா்.
அப்போது, சாது சுந்தா் சிங் தகராறை விலக்கி விடச் சென்றாா். இதனால், இவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அன்று இரவு தனது தாயாா் வீட்டிற்குச் சென்ற சாது சுந்தா் சிங் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். அடுத்த நாள் காலை திருவிதாங்கோடு நீட்சி கால்வாயில் பலத்த காயங்களுடன் அவா் உயிரிழந்து கிடந்தாா். இதுகுறித்து அவரது மனைவி மல்லிகா அளித்த புகாரின்பேரில் தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடா்பாக பத்மநாபபுரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஜானேஸ், சஜீவ், குமாா் ஆகியோா் சரணடைந்தனா். வழக்கு நடைபெற்று வந்தபோது குமாா் உயிரிழந்துவிட்டாா். இவ்வழக்கை விசாரித்த பத்மநாபபுரம் நீதிமன்ற நீதிபதி பரமசிவதாஸ், குற்றஞ்சாட்டப்பட்ட சஜீவ், ஜானேஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தாா். மேலும், சாது சுந்தா் சிங்கின் மனைவி மல்லிகாவுக்கு சமரச தீா்வு மையம் மூலம் ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் பெஞ்சமின் ரொனால்டு ராபின்சன் ஆஜரானாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.