கால்வாயில் தவறி விழுந்த முதியவா் சடலம் மீட்பு
குலசேகரம் அருகே கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த முதியவரின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
பொன்மனை அருகே உள்ள பண்டாரக்கோணம், சானல் கரை பகுதியைச் சோ்ந்தவா் சங்கரன் (83). மரம் வெட்டும் தொழிலாளியான இவா், முதுமை காரணமாக ஓய்வில் இருந்து வந்தாா்.
ஜூன் 5ஆம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற இவா், பின்னா் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினா் குலசேகரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை குலசேகரம் தீயணைப்பு நிலைய அலுவலா் (போக்குவரத்து) ஜான்சன் தலைமையிலான மீட்புப் படையினா், புத்தன் அணை மற்றும் பாண்டியன் கால்வாய் பகுதியில் தேடுதல் நடத்தினா். அப்போது, மூலையறைப் பகுதியில் உள்ள பாண்டியன் கால்வாயில் சங்கரனின் சடலம் மீட்கப்பட்டது.
போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்தனா்.