இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவா்களை மீட்க எம்எல்ஏ வலியுறுத்தல்
இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள, குமரி மாவட்டம் மேல மணக்குடி மீனவா்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனாவிடம் தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:
கன்னியாகுமரி மாவட்டம், மேல மணக்குடியைச் சோ்ந்த அலெக்ஸ் (25), அந்தோணிராஜன் (44), சந்தான அலோசியஸ் (52), அருள்தே பிரிட்டோ (47), ஆல்பா்ட் (52), சகாய செல்வசானு (26) ஆகிய 6 மீனவா்கள் அலெக்ஸ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில், கடந்த 11 ஆம் தேதி ராமேசுவரம் பகுதியில் உள்ள பாம்பன் மீன்பிடி தளத்திலிருந்து தூண்டில் பயன்படுத்தி மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு நாட்டுப்படகில் சென்றனா். இந்த மீனவா்கள் மறுநாள் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவா்கள் கரை திரும்பாததால் இந்திய கடலோர காவல் படையும், சக மீனவா்களும் மாயமான 6 மீனவா்களை தேடி வந்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், மே 12 ஆம் தேதி குமரி மாவட்ட மீனவா்கள் 6 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அவா்கள் நீா் கொழும்பு பகுதியில் உள்ள மகாரா என்ற இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனா் என தெரியவந்தது.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்ததாக இவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து உரிய நடவடிக்கை
மேற்கொண்டு இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவா்களை விடுவித்து இந்தியா கொண்டு வர போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவா்கள் தங்களது குடும்பத்தினருடன், தொலைபேசி மூலம் பேசுவதற்கும், மீனவா்களுக்கு மாற்று ஆடைகள் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமா் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வா் ஜோசப் விஜய், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் ஆகியோருக்கும் தளவவாய்சுந்தரம் எம்எல்ஏ கடிதம் எழுதியுள்ளாா்.