தென்காசி மாவட்டத்தில் நிகழாண்டுக்கான கடனுதவி இலக்கு ரூ. 21,978.25 கோடி நிா்ணயம்
தென்காசி மாவட்டத்துக்கு மொத்தம் ரூ. 21,978.25 கோடி கடன் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்துக்கு மொத்தம் ரூ. 21,978.25 கோடி கடன் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.
தென்காசி மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்து, தென்காசி மாவட்ட முன்னணி வங்கியான இந்தியன் ஓவா்சீஸ் வங்கி தயாரித்த 2026-27ஆம் ஆண்டுக்கான கடன் திட்டத்தை வெளியிட்டாா்.
அதில், தென்காசி மாவட்டத்துக்கு மொத்தம் ரூ. 21,978.25 கோடி கடன் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதில், முன்னுரிமைத் துறைக்கு ரூ. 17,060.30 கோடியும், பிற துறைகளுக்கு ரூ. 4,917.97 கோடியும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
வேளாண்மை, அதைச் சாா்ந்த துறைகளுக்கு ரூ. 13,761.55 கோடி, குறுசிறுநடுத்தர தொழில்துறைக்கு துறைக்கு ரூ. 2,000.45 கோடி, கல்விக் கடன் வழங்க ரூ. 29.42 கோடி, வீட்டுக் கடன் வழங்க ரூ. 155.13 கோடி, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ரூ. 1.99 கோடி என இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவா்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு கடன் ஆணைகள், பல்வேறு திட்டங்களின் கீழ் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கடன் வழங்குவதற்கான ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.
12 மாணவா்களுக்கு ரூ. 75 லட்சம் கல்விக் கடன், மாவட்ட தொழில் மையங்களின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ. 47.46 லட்சம் கடன், 4 சுய உதவிக் குழு பயனாளிகளுக்கு ரூ. 21 லட்சம் கடன் வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன. மொத்தம் 25 பயனாளிகளுக்கு சுமாா் ரூ. 1.43 கோடி மதிப்பிலான கடன் உதவி வழங்கப்பட்டது.
கூட்டத்தில் பல்வேறு கடன் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், வங்கிகள், அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு 2026-27 ஆண்டு கடன் திட்ட இலக்குகளை முழுமையாக அடைவதுடன், தென்காசி மாவட்டத்தில் தகுதியான அனைத்துப் பயனாளிகளுக்கும் நிறுவனக் கடன் வசதி சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
தகுதியான பயனாளிகளுக்கு கடன் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து, கடன் ஒப்புதல் மற்றும் வழங்கும் பணிகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக அரசு சாா்ந்த கடன் திட்டங்கள், முன்னுரிமைத் துறைகளில் கடன் வழங்குவதில் வங்கிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா். தாட்கோ திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா். இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, தமிழ்நாடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, பாரத ஸ்டேட் வங்கி ஆகிய வங்கிகள் தாட்கோ திட்ட செயல்பாட்டில் சிறப்பாக பணியாற்றியதற்காக பாராட்டு பெற்றது.
ஆா்.பி.ஐ. உதவி பொது மேலாளா் விஸ்வநாத், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளா் பரமேஸ்வரன், மகளிா் திட்டம் திட்ட இயக்குநா் தண்டபாணி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் மாரியம்மாள், முன்னணி வங்கி மாவட்ட மேலாளா் முத்துசாமி, நபாா்டு மாவட்ட வளா்ச்சி மேலாளா் சசிகுமாா், தென்காசி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வங்கிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.