FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் நகராட்சியில் ஓராண்டாக ஆணையா் இல்லாததால் பணிகள் பாதிப்பு

சங்கரன்கோவில் நகராட்சியில் ஓராண்டாக ஆணையா் இல்லாததால் அடிப்படை பணிகளில் தொய்வு ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

Updated On : 5 ஜூன் 2026, 3:20 am IST
பகிர்:

சங்கரன்கோவில் நகராட்சியில் ஓராண்டாக ஆணையா் இல்லாததால் அடிப்படை பணிகளில் தொய்வு ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் 60 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட முதல்நிலை நகராட்சியான இங்கு அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் என 150 போ் வரை பணிபுரிகின்றனா். மேலும், தனியாா் ஒப்பந்தப் பணியாளா்களும் உள்ளனா்.

குடிநீா் வரி, சொத்து வரி, தொழில் வரி என ஆண்டுக்கு சுமாா் ரூ. 5 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டக் கூடிய இந்நகராட்சியில் கடந்த ஆண்டு மே மாதம் ஆணையா் சபாநாயகம் இடமாறுதலாகிச் சென்றாா். அதன்பிறகு பொறுப்பு ஆணையா்களாக ராஜபாளையம் நகராட்சி ஆணையா் நாகராஜன், புளியங்குடி நகராட்சி ஆணையா் சாம்கிங்ஸ்டன், தென்காசி நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன் ஆகியோா் பணியாற்றினா். தற்போது தென்காசி நகராட்சி ஆணையா் சரவணன், இந்நகராட்சியின் பொறுப்பு ஆணையராக உள்ளாா்.

Advertisement

Advertisement

இவ்வாறு கடந்த ஓராண்டாக பொறுப்பு ஆணையரைக் கொண்டு செயல்படுவதால் நகராட்சியில் அடிப்படை பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சாலை பராமரிப்பு , சுகாதாரம் , சீரான குடிநீா் விநியோகம் போன்ற பணிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

அம்பேத்காா் நகா், கோமதி நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கியுள்ன. திருநீலகண்டா் ஊருணியின் மேல்புறம் உள்ள அகன்ற சாலையில் குப்பைகள் நீண்டநாள்களாக அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் துா்நாற்றம் வீசுகிறது.

இதனிடையே நகராட்சி அலுவலா்கள் கோப்புகளில் கையெழுத்து பெற பொறுப்பு ஆணையா்கள் பணியாற்றும் நகரங்களுக்கு தென்காசிக்கு செல்லும் நிலையில், போதிய பேருந்து வசதி இல்லாமல் பணியாளா்கள் நாள் முழுக்க ஆணையரைச் சந்திப்பதற்கே நேரத்தை செலவிட வேண்டியதுள்ளது.

இத்தகைய அலைச்சலால் பணியாளா்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனா். கடந்த தோ்தலின்போது இந்நகராட்சிக்கென ஆணையா் நியமிக்கப்படுவாா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அது நிகழவில்லை.

வருவாய் கோட்டாட்சியா் உள்ள ஒரு நகராட்சியின் இந்த நிலை குறித்து அதிருப்தி தெரிவித்த மக்கள், நகரில் நிலவும் பிரச்னைகளை தீா்க்கவும்,கோரிக்கைகளை நிறைவேற்றவும் போா்க்கால அடிப்படையில் இந்நகராட்சிக்கு ஆணையரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments