FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

வாக்கு எண்ணும் மையத்தில் அப்பாவு தர்னா: துணை ராணுவம் வெளியேற்றியது

திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளர் மு. அப்பாவு, தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு தேர்தல் அலுலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 20 மே 2016, 5:52 am IST
பகிர்:

திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளர் மு. அப்பாவு, தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு தேர்தல் அலுலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராதாபுரம் தொகுதி முடிவுகளை அறிவித்தபோது அதிமுக வேட்பாளர் இன்பதுரை, திமுக வேட்பாளர் அப்பாவுவைவிட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், தபால் வாக்குகளில் குழப்பம் உள்ளதாகக் கூறி திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, முடிவுகளை அறிவிக்க காலதாமதம் ஏற்பட்டது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சி. சமயமூர்த்தி, மாநகர காவல் ஆணையர் திருஞானம் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்து ஆலோசனை நடத்தினர். தமிழக தேர்தல் ஆணையத்துக்கும் நிலவரம் குறித்து தகவல் தெரிவித்து ஆலோசனை கோரப்பட்டது.

இந்நிலையில், திமுக வேட்பாளர் அப்பாவு, வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்தார். தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதில் குளறுபடி இருப்பதாகவும், தகுதியானவை நிரகாரிக்கப்பட்டதாகவும் புகார் கூறினார். இதையடுத்து, 21 சுற்றுகளின் விவரங்களும் மீண்டும் ஒருமுறை தெரிவிக்கப்பட்டது. தபால் வாக்குகளும் 2 முறை எண்ணப்பட்டது. ஆனால், அதிமுக வேட்பாளர்தான் 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனை ஏற்க முடியாது எனக் கூறி அப்பாவு வாக்குவாதம் செய்தார். அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

Advertisement

Advertisement

இதையடுத்து, துணை ராணுவம் வரவழைக்கப்பட்டு அதிமுக, திமுக முகவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால், திமுக வேட்பாளர் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் அவரை வாக்கு எண்ணும் மையத்திலிருந்து துணை ராணுவத்தினர் அப்புறப்படுத்தினர். இதன் பிறகு நுழைவாயிலில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார். அங்கிருந்து அவரை காவல் துறையினர் வெளியேற்றினர். பின்னர், செய்தியாளர்களிடம் மு. அப்பாவு கூறியது:

200 தபால் வாக்குகளில் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியரிடம் சான்றொப்பம் பெறப்பட்டுள்ளது. இவற்றை ஏற்க முடியாது எனக் கூறிவிட்டனர். 170 வாக்குகளில் நான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.  இந்த முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன் என்றார்.

வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் இன்பதுரை கூறுகையில், தேர்தல் நடத்தும் அலுவலரையும், தேர்தல் பார்வையாளரையும் மிரட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து கலவரத்தை ஏற்படுத்த அப்பாவு முயன்றார்.  இந்த வெற்றி முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளுக்கும், அதிமுக-வுக்கும் கிடைத்த வெற்றி என்றார்.

தேர்தல் பார்வையாளர் கல்யாண் ரெவல்லா கூறுகையில், தேர்தல் முடிவு அறிவிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இருதரப்பும் நெருக்கடி தந்ததால் பெரிதும் சவாலாக இருந்தது. இருப்பினும், முறையாக முடிவுகளை அறிவித்துள்ளோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments