FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

7.8.1976: விளாத்திக்குளமருகில் கிராமத் தகராறில் 18 பேர் சாவு

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 4:53 am IST
7.8.1976 - Dinamani
பகிர்:

சென்னை, ஆக. 6 - திருநெல்வேலி மாவட்டம் விளாத்திகுளம் தாலூகாவைச் சேர்ந்த மார்த்தலாபுரம் கிராமத்தில் புதனன்று நேர்ந்த வன்முறை கோர சம்பவத்தைத் தொடர்ந்து 27 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அரசாங்கச் செய்திக் குறிப்பொன்று தெரிவிக்கிறது.

இந்த மோதலில் ஏழு வீடுகள் எரிக்கப்பட்டன; இரண்டு வைக்கோல் போர்கள் எரிந்து சாம்பலாயின. எரிந்த வீடுகளிலிருந்து கருகிய சடலங்கள் 18 மீட்கப்பட்டன.

இரண்டு சாதியினருக்கிடையே நீண்ட நாட்களாக இருந்துவந்த பகையைத் தொடர்ந்து அந்தக் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் கொலை செய்யப்பட்டதாகவும், இக்கொலை கடந்த புதனன்று நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதை அடுத்து பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக எதிர் கோஷ்டியினர் தீ வைப்பில் ஈடுபட்டதாகவும், இரண்டு வைக்கோல் போர்கள் உள்பட ஏழு வீடுகள் எரிக்கப்பட்டதாகவும், அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். மாவட்ட கலெக்டர், போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று சமரச முயற்சியில் ஈடுபட்டனர். கலெக்டரும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் விளாத்திகுளம் வட்டாரத்திலேயே முகாமிட்டு மேற்கொண்டு வன்முறை அசம்பாவித நிகழ்ச்சி எதுவும் நடைபெறாமல் தடுக்க முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

எரிந்த வீடுகளிலிருந்து பத்து ஆண்களின் சடலங்களும், பெண்கள் சடலம் மூன்று, குழந்தைகள் சடலம் ஐந்தும் கருகிய நிலையில் கண்டடெடுக்கப்பட்டன. நிலைமை தற்போது கட்டுக்கடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மும்முரமாக நடக்கிறது - இரண்டாம் செயற்கைக் கோள் வடிவமைப்புப்பணி

பெங்களூர், ஆக, 6 - இந்தியாவின் இரண்டாவது செயற்கைக் கோள் 1977-78ல் ரஷியாவிலிருந்து ஏவப்படும். இந்த செயற்கைக் கோள் முழுக்கவும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இப்போது இதற்கு முன் நடவடிக்கையாக, இந்த செயற்கைக் கோளின் எஞ்ஜினியரிங் மாதிரியை இந்திய விஞ்ஞானிகள் தயாரித்து வருகின்றனர்.

பெங்களூருக்கு அருகில் உள்ள 'பீன்யா' என்னும் இடத்தில் இந்திய விஞ்ஞான செயற்கைக்கோள் திட்டப் பகுதி உள்ளது. இங்குள்ள 400 இளம் எஞ்ஜினியர்கள், இரண்டாவது செயற்கைக்கோளின் எஞ்ஜினியரிங் மாதிரியை வடிவமைக்கும் பணியில் மிகவும் ஆர்வத்தோடும் மும்முரத்தோடும் ஈடுபட்டுள்ளனர். இவர்களில், பெரும்பாலோர் 25 முதல் 32 வயதுக்குட்பட்டவர்களாவர்.

இத்தகவல்களை, இந்த செயற்கைக் கோள் திட்ட நிலையத்தின் டைரக்டர் யு.ஆர், ராவ் தெரிவித்தார். முதலாவது செயற்கைக் கோளான ஆர்யபட்டா விண்ணில் ஏவப்பட்ட உடனேயே, 2-வது செயற்கைக் கோளுக்கான வேலை துவங்கி விட்டதாக அவர் கூறினார்.

ஆர்யபட்டா விண்ணில் ஏவப்பட்டு, ஓராண்டுக்கு மேலாகிறது. அது விண்ணில் சுற்றியவாறு தொடர்ந்து தகவல்களை அனுப்பி வருகிறது என்றும் அவர் சொன்னார். இந்தச் செயற்கைக் கோளின் கட்டமைப்பு நன்கு உறுதியாக உள்ளது என்பதை, ஆர்யபட்டாவின் செயல்முறை நன்கு நிரூபிக்கிறது என்று அவர் கூறினார்.

2-ம் செயற்கைக் கோளை உருவாக்குவதற்கு தங்களுக்கு நல்ல வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளதாக அவர் சொன்னார். பல பெண்களும் இந்தப் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளதாகவும் சாப்பாட்டு வேளையில் கூட தாங்கள் விவாதம் நடத்தி "கருத்தரங்குகளாக" மாற்றி விடுவதாகவும் அவர் கூறினார்.

summary

18 dead in village dispute near Vilathikulam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments