பாளையங்கால்வாயில் தற்காலிக பாலம் சேதம்: மக்கள் போராட்டம்
மேலப்பாளையத்தில் பாளையங்கால்வாயில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலம் புதன்கிழமை காலையில் மீண்டும் சேதமானதால்
மேலப்பாளையத்தில் பாளையங்கால்வாயில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலம் புதன்கிழமை காலையில் மீண்டும் சேதமானதால் மாணவிகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். இதனால் அதிகாரிகளைக் கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுத்தமல்லி அருகேயுள்ள பழவூரில் இருந்து தொடங்கும் பாளையங்கால்வாய், அங்கிருந்து மேலப்பாளையம், பாளையங்கோட்டை வழியாக செல்கிறது. மேலப்பாளையம்-மேலநத்தம் சாலையில் பாளையங்கால்வாயின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணிகள் அண்மையில் தொடங்கின. இதையடுத்து வாகன போக்குவரத்திற்காக, சிமென்ட் குழாய்கள் வழியாக தண்ணீர் செல்லும் வகையில் மண்ணால் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கால்வாயில் தண்ணீர் வரத்து அதிகரிப்பைத் தொடர்ந்து பாலத்தில் மண்ணரிப்பு ஏற்பட்டதால் தண்ணீர் செல்லும் குழாய்கள் கடந்த ஜூலை 23 ஆம் தேதி சேதமானது. அதன்பின்பு பொக்லைன் இயந்திரத்தின் உதவியோடு சீரமைக்கப்பட்ட நிலையில், இருசக்கர வாகனங்களும், பாதசாரிகளும் மட்டும் சென்று வந்தனர்.
மீண்டும் சேதம்: இந்நிலையில் புதன்கிழமை காலையில் தற்காலிக பாலம் மீண்டும் சேதமானது. இதனால் மேலப்பாளையத்தில் இருந்து மேலநத்தம் சாலையில் உள்ள முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் பள்ளிகளுக்கு நடந்து செல்ல முடியாமல் தவித்தனர். இதனால் அப்பகுதி பொதுமக்களும், பல்வேறு கட்சியினரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் தொடர்ந்தது. போராட்டக்குழுவினருடன் மேலப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் தில்லை நாகராஜன், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். திங்கள்கிழமைக்குள் (ஆக.5) தற்காலிக பாலத்தை சீரமைத்து மக்களின் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டக்குழுவினர் கலைந்து சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.