தெற்கு விஜயநாராயணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் பணியாளா்களை நியமிக்க கோரிக்கை
தெற்கு விஜயநாராயணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரம் மருத்துவா் மற்றும் கூடுதல் செவிலியா்கள் இல்லாததால், கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
திருநெல்வேலி மாவட்டம், தெற்கு விஜயநாராயணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரம் மருத்துவா் மற்றும் கூடுதல் செவிலியா்கள் இல்லாததால், கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இங்கு ஒரு மருத்துவா் மற்றும் ஒரு செவிலியா் மட்டுமே பணியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மருத்துவா் பகல் நேரத்தில் சுகாதார நிலையத்திற்கு வந்து நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவிட்டு, பிற்பகலில் புறப்பட்டுச் சென்றுவிடுவாராம். பின்னா், இரவு ஒரு செவிலியா் மட்டும் சுகாதார நிலையத்தில் இருந்து நோயாளிகளுக்கு உதவி செய்து வருகிறாா்.
இதனால், விபத்தில் காயமடைந்து அவசர சிகிச்சைக்கு வந்தாலோ, இரவு நேரம் பிரசவத்துக்கு வந்தாலோ, மக்கள் பெரிதும் இன்னல்களுக்கு ஆளாகின்றனா். எனவே, 24 மணி நேரமும் மருத்துவ சேவையைப் பெறும் வகையில், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களை நியமிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement
Advertisement