உரம் விலை உயர்வைக் கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் நூதனப் போராட்டம்
மத்திய அரசு யூரியா உரத்தின் விலையை மறைமுகமாக உயர்த்தியுள்ளதாகவும், தங்கள் மீது அரசு விரோதப் போக்கை கடைப்பிடிப்பதாகவும்
மத்திய அரசு யூரியா உரத்தின் விலையை மறைமுகமாக உயர்த்தியுள்ளதாகவும், தங்கள் மீது அரசு விரோதப் போக்கை கடைப்பிடிப்பதாகவும் கண்டனம் தெரிவித்து, கோவில்பட்டியில் விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
மத்திய அரசு 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை யூரியா உரத்தை ரூ.265-க்கு விற்று வந்தது. தற்போது அதே விலையில் 5 கிலோவை குறைத்து 45 கிலோவுக்கு விற்பனை செய்து, மறைமுகமாக யூரியாவின் விலையை உயர்த்தியுள்ளது.
மத்திய அரசின் இச்செயலைக் கண்டித்தும், விவசாயிகள் மீது விரோதப் போக்கை தொடர்ந்து கடைப்பிடிப்பதாகக் கூறி, அதை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெற்றது. கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் தலைமையில், கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள், யூரியா மூட்டைக்கு மாலை அணிவித்து நூதன முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இப்போராட்டத்தில் மானாவாரி விவசாயிகள் சங்கத்தின் நவநீதன், ஒன்றிய விவசாய அணிச் செயலர் நவநீதகிருஷ்ணன், நல்லிணக்கப் பண்பாட்டுக் கழக நிறுவனர்- தலைவர் சங்கரலிங்கம், நிர்வாகக் குழு உறுப்பினர் முருகன், வட்டார விவசாயிகள் சங்கத்தின் ரங்கசாமி, ஆதிமூலம், தென்னக மானாவாரி விவசாயிகள் சங்கத்தின் தலைமை நிலையச் செயலர் காஜாமைதீன், விவசாயி ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் கோட்டாட்சியர் அலுவலக தலைமை எழுத்தர் ரகுபதியிடம் மனு அளித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.