7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப் படி ஊதியம் கோரிஜன. 3 முதல் கோயில் பணியாளர்கள் தொடர் போராட்டம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பணியாளர்களுக்கு 7 ஆவது ஊதியக் குழு பரிந்துரைப் படி
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பணியாளர்களுக்கு 7 ஆவது ஊதியக் குழு பரிந்துரைப் படி ஊதியம் வழங்க வலியுறுத்தி, ஜன. 3ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக கோயில் பணியாளர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.
இச்சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் பாலசுப்பிரமணிய குருக்கள் தலைமையில் நடைபெற்றது. செயலர் நெல்லையப்பன், பொருளாளர் ஆறுமுகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருக்கோயில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் பணியாளர்கள் சங்கத் தலைவர் செய்தியாளர்களிடம் கூறியது: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மட்டும் 220 பணியாளர்கள் உள்ளனர். கோயில் பணியாளர்களுக்கு இதுவரை 7ஆவது ஊதியக் குழு ஊதியம் வழங்கப்பட வில்லை.
தமிழகத்தில் 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப் படி கோயில் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க கேட்டு கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி ஆறு கட்டங்களாக போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மூன்று மாதம் கால அவகாசம் கேட்டனர். ஆனால் ஐந்தரை மாதங்கள் கடந்தும் எந்த அறிவிப்பும் இல்லை. எனவே, 7 ஆவது ஊதியக் குழு பரிந்துரைப் படி ஊதியம் வழங்க வலியுறுத்தி ஜன. 3, 4-ஆம் தேதிகளில் ஆர்ப்பாட்டமும், ஜன. 10 ஆம் தேதி உண்ணாவிரதமும், ஜன. 23ஆம் தேதி ஒரு நாள் உள்ளிருப்பு போராட்டமும், ஜன. 31-ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டமும், பிப். 4-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டமும் நடைபெறும் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.