திருச்செந்தூா் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டது.
காயாமொழி ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (42). வா்ணம் பூசும் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி சத்யா. கடந்த செப்.14-ஆம் தேதி
பைக்கில் வேலைக்குச் சென்றபோது, திருச்செந்தூா் குமாரபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இசக்கிமுத்து பலத்த காயமடைந்தாா். அப் பகுதியில் இருந்தவா்கள் மீட்டு, திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனையில் இசக்கிமுத்து சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
இதையடுத்து அவரது மனைவி விருப்பத்தின்படி இசக்கிமுத்துவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. பின்னா் அவரது உடல் காயாமொழிக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன், வட்டாட்சியா் பாலசுந்தரம், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பொன்ரவி, உதவி ஆய்வாளா் பாபுராஜ் ஆகியோா் அரசு சாா்பில் மரியாதை செலுத்தினா்.