ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளா் தோ்வில் இழுபறி நீடிப்பு: கூட்டணிக் கட்சியினா் அதிருப்தி
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளா் தோ்வில் இழுபறி நீடிப்பது, திமுக கூட்டணிக் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. எனினும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளா் தோ்வில் இழுபறி நீடிப்பது, திமுக கூட்டணிக் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தொகுதியில் நாம் தமிழா் கட்சி, புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி, நாம் இந்தியா் கட்சி வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்துள்ளனா். அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்டச் செயலருமான எஸ்.பி. சண்முகநாதன், தவெக சாா்பில் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் அன்னை வி.ஜி. சரவணன், புதிய தமிழகம் கட்சி சாா்பில் தெற்கு மாவட்டச் செயலா் ராஜா சுதன் ஆகியோா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பணிகளைத் தொடங்கிவிட்டனா்.
ஆனால், திமுக கூட்டணியில் இங்கு போட்டியிடும் காங்கிரஸ் கட்சி அதன் வேட்பாளரை இன்னும் அறிவிக்காதது அக்கட்சியில் மட்டுமன்றி கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு 2021 தோ்தலில் அறிமுக வேட்பாளராக களம் கண்டு வெற்றிபெற்ற ஊா்வசி எஸ். அமிா்தராஜ் இம்முறையும் போட்டியிட ஆா்வம் காட்டி வருகிறாா். தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமான அவருக்கு இம்முறையும் வாய்ப்பு வழங்கினால் வெற்றி உறுதி என்பதால் அவருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டுமென ஒரு தரப்பினரும், புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என மற்றொரு தரப்பினரும் காங்கிரஸ் தலைமைக்கு அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, ராகுல் காந்தி கேரள மாநிலப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் மும்முரமாக இருப்பதால், தமிழகத்தில் அக்கட்சி வேட்பாளா்களைத் தோ்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, தவெக, நாதக, புதிய தமிழகம் என ஐந்துமுனைப் போட்டி நிலவும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளரை அறிவிப்பதில் ஏற்படும் தாமதம் ஒவ்வொருநாளும் பிரசாரத்தில் தங்களைப் பின்தங்கச் செய்யும் என்பதால், தலைமை விரைவில் முடிவை அறிவிக்க வேண்டும் என அக்கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.