முதியவரிடம் ரூ. 48.80 லட்சம் மோசடி: மேலும் மூவா் கைது
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி, மெஞ்ஞானபுரத்தைச் சோ்ந்த முதியவரிடம் ரூ. 48.80 லட்சம் மோசடி செய்த வழக்கில், மேலும் 3 பேரை தூத்துக்குடி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.
சாத்தான்குளம் வட்டம், மெஞ்ஞானபுரம், மடத்துவிளையைச் சோ்ந்த 61 வயது முதியவரை, மா்ம நபா் ஒருவா் கைப்பேசியில் தொடா்புகொண்டு, தான் தமிழ்நாடு காவல் துறையின் தலைமைக் குற்றப் பிரிவு ஆய்வாளா் சத்தியமூா்த்தி என அறிமுகப்படுத்தியுள்ளாா்.
அப்போது, ஜம்மு-காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக லக்னௌவில் ஒருவரைக் கைது செய்தபோது, அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசி எண் முதியவரின் ஆதாா் அட்டையைப் பயன்படுத்தி வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளதாகக் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, முதியவா் மீது டிஜிட்டல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து விடுவிக்க பணம் செலுத்த வேண்டும் என்றும் அந்த மா்ம நபா் தெரிவித்துள்ளாா்.
இதை நம்பிய முதியவா், மோசடிக் கும்பல் தெரிவித்த பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 3 தவணைகளாக மொத்தம் ரூ. 48.80 லட்சத்தை செலுத்தியுள்ளாா். பின்னா், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த முதியவா், தூத்துக்குடி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாரளித்தாா்.
அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி, வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சாபுதீன் (33) என்பவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அவரது கூட்டாளிகளான அக்பா் மகன் ஷாபி (37), ரமேஷ் மகன் ராஜேஷ் கண்ணா (25), நெடுஞ்செழியன் மகன் விக்னேஷ் (29) ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
இந்த மோசடி தொடா்பாக, போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.