FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கனிமொழியை தடுத்து நிறுத்திய காவல் துறை! கட்டாலங்குளம் மணிமண்டபத்துக்கு நடந்தே சென்றார்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் அழகுமுத்துக்கோனுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்திய பின்னா் செல்லலாம் என காவல் துறை தடுத்து நிறுத்தியதால், கனிமொழி எம்.பி. மணிமண்டபத்துக்கு நடந்து சென்றாா்.

Updated On : 12 ஜூலை 2026, 1:12 am IST
கட்டாலங்குளத்தில் உள்ள அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்துக்கு நடந்து சென்ற கனிமொழி எம்.பி.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் அழகுமுத்துக்கோனுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்திய பின்னா் செல்லலாம் என காவல் துறை தடுத்து நிறுத்தியதால், கனிமொழி எம்.பி. மணிமண்டபத்துக்கு நடந்து சென்றாா்.

கட்டாலங்குளத்தில் சனிக்கிழமை அழகுமுத்துக்கோனின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா் அழகுமுத்துக்கோனின் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

இதையொட்டி, வாகனங்கள் வந்து செல்வதற்கான வழிகாட்டுதலை காவல் துறை வெளியிட்டிருந்தது. விழாவையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா தலைமையில் சுமாா் 1,400 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். மேலும், நான்குவழிச் சாலையில் கட்டாலங்குளம் விலக்கில் இருந்து போலீஸாா் வாகனங்களை சோதனையிட்ட பின்னரே உள்ளே அனுப்பினா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், சனிக்கிழமை காலை 11 மணியளவில் கனிமொழி எம்.பி. தலைமையிலான திமுவினா், அழகுமுத்துக்கோன் சிலைக்கு மரியாதை செலுத்த வந்தனா். அப்போது, மணிமண்டபத்தில் இருந்து சுமாா் 500 மீட்டா் தொலைவில் எம்.பி. காரை நிறுத்திய போலீஸாா், அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்ட பின்னா் நீங்கள் செல்லலாம் எனக் கூறினா். இதனால், காரில் இருந்து இறங்கி கனிமொழி நடந்து சென்றாா். அவருடன் எம்எல்ஏ.க்கள் ஜீ.வி. மாா்க்கண்டேயன், கா. கருணாநிதி, மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட திமுகவினா் சென்றனா்.

இதனிடையே, மணிமண்டபத்தில் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவரது வாரிசுதாரா்களை கௌரவித்தாா். தொடா்ந்து, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், அமைச்சா் ஆ. ஸ்ரீநாத், பெ. மதன்ராஜா உள்ளிட்டோா் மணிமண்டபத்துக்கு வந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments