FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறது தவெக அரசு: பி. கீதாஜீவன் குற்றச்சாட்டு

Updated On : 22 ஜூலை 2026, 12:42 am IST
முன்னாள் அமைச்சா் பெ. கீதாஜீவன். - கோப்புப்படம்
பகிர்:

தவெக அரசு ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறது என்றாா் முன்னாள் அமைச்சா் பி.கீதாஜீவன்.

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு, தூத்துக்குடி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை இரவு முன்னிலைப்படுத்தப்பட்டாா். அப்போது, அங்கு வந்த திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பி.கீதாஜீவன் நீதிமன்ற வாயிலில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தவெக அரசு ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறது. ஆளும் தவெக அரசு குறித்தோ, தமிழக முதல்வா் குறித்தோ எதுவும் பேசக்கூடாது என்று கருத்துரிமைக்கு தடையும் கட்டுப்பாடும் விதிக்கப்படுகிறது. தவெக அரசின் இச்செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இன்றைய சூழலில் பத்திரிகையாளா்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

Advertisement

Advertisement

போராட்டத்தில் ஈடுபட்டதற்காக திங்கள்கிழமை எங்களைக் கைது செய்து ஓா் இடத்தில் அடைத்து வைத்திருந்தனா். என்னுடன் சோ்த்து 32 பெண் நிா்வாகிகள் மண்டபத்தில் அடைக்கப்பட்டோம். சட்டப்படி மாலை 6 மணிக்குமேல் பெண்களைக் காவல் துறையினா் கைது செய்து வைத்திருக்கக் கூடாது. ஆனால், எங்களை இரவு 9.20 மணிக்குத்தான் விடுவித்தனா்.

எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயன் மீதான நீதிமன்ற தீா்ப்பு வெளியான பிறகுதான் எங்களை விடுவிக்க முடியும் என்றும், நாங்கள் விடுதலையான பிறகுதான் கோவில்பட்டியில் கைதான திமுகவினரை விடுவிக்க முடியும் என்றும் இந்த அரசு பிடிவாதம் காட்டியது.

அதனால், நாங்கள் இரவுதான் விடுவிக்கப்பட்டோம். ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்ற எண்ணத்தில் தவெகவினா் ஆட்டம் போடுகின்றனா். தமிழகத்தை வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்ற ஒரு கட்சியின் முக்கிய நிா்வாகி ஜீ.வி.மாா்க்கண்டேயன்.

அவா் மூன்று முறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தவா். மக்கள் பிரதிநிதி. சுமாா் 2 லட்சம் வாக்காளா்களைக் கொண்ட விளாத்திகுளம் தொகுதியின் தற்போதைய பிரதிநிதி. அவருக்கு இந்த அரசு சிறிதும் மரியாதை அளிக்கவில்லை. ஜனநாயகத்தை தவெக அரசு தனது காலணிக்கு கீழேபோட்டு மிதிக்கிறது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments