ஊராட்சி செயலரை இடமாற்றம் செய்யக் கோரி ஓட்டப்பிடாரத்தில் முற்றுகைப் போராட்டம்
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், சில்லாங்குளம் ஊராட்சி செயலரை இடமாற்றம் செய்யக் கோரி, கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், சில்லாங்குளம் ஊராட்சி செயலரை இடமாற்றம் செய்யக் கோரி, கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சில்லாங்குளம், சுப்பம்மாள்புரம், ஓம். சரவணபுரம், பரமன் பச்சேரி ஆகிய 4 கிராமங்களை உள்ளடக்கிய சில்லாங்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சில்லாங்குளம் மற்றும் சுப்பம்மாள்புரத்தில் முறையாக வேலை நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கேட்டதற்கு, சில்லாஙகுளம் ஊராட்சி செயலா் நிதி ஆதாரம் இல்லை எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சில்லாங்குளம், சுப்பம்மாள்புரம் கிராம மக்கள், ஊராட்சி செயலரை இடமாற்றம் செய்யக் கோரி ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய ஆணையா் ஜவகரிடம் கோரிக்கை மனு வழங்கினா். விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் உறுதியளித்ததைத் தொடா்ந்து, கிராம மக்கள் கலைந்து சென்றனா்.