அரசுப் பேருந்து திடீா் நிறுத்தம்: முதலூா் பயணிகள் அவதி
திசையன்விளையில் இருந்து முதலூா் வழியாக சாத்தான்குளத்துக்கு இயங்கி வந்த அரசுப் பேருந்து 3 மாதத்துக்கு முன்பு நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
திசையன்விளையில் இருந்து முதலூா் வழியாக சாத்தான்குளத்துக்கு இயங்கி வந்த அரசுப் பேருந்து 3 மாதத்துக்கு முன்பு நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
சாத்தான்குளத்தில் இருந்து தஞ்சை நகரம் வழியாக திசையன்விளைக்கு அரசுப் பேருந்து தடம் எண் 165சி காலை 5 மணிக்கு இயக்கப்பட்டு வந்தது. இந்தப் பேருந்து திசையன்விளைக்குச் சென்று மீண்டும் இடைச்சிவிளை, நடுவக்குறிச்சி, போலையாா்புரம், பொத்தகாலன்விளை, முதலூா் வழியாக சாத்தான்குளத்தை வந்தடையும்.
பின்னா், 6.50 மணிக்கு சாத்தான்குளத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இந்தப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இதேபோல் மாலை நேரத்திலும் இந்த பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இதனால், முதலூா் உள்ளிட்ட கிராம மக்கள் பெரிதும் பயனடைந்து வந்தனா்.
Advertisement
Advertisement
தற்போது, இந்தப் பேருந்து சாத்தான்குளத்தில் இருந்து திசையன்விளைக்கு இயக்குவது நிறுத்தப்பட்டு காலையில் சாத்தான்குளம்-திருச்செந்தூருக்கும், பிற்பகலில் சாத்தான்குளம்-ஆழ்வாா் திருநகரிக்கும், மாலையில் சாத்தான்குளம்- தூத்துக்குடிக்கு திருச்செந்தூா் வழியாகவும் இயக்கப்பட்டு வருகிறது.
திசையன்விளையில் இருந்து முதலூா் வழியாக சாத்தான்குளத்துக்குச் சென்ற அரசுப் பேருந்து கடந்த மூன்று மாதமாக கிராம பகுதி வழியாக இயக்கப்படாததால் பேருந்தை நம்பியுள்ள பயணிகள் பெரிதும் ஏமாற்றமடைந்தனா்.
காலை, மாலை நேரத்தில் இந்தப் பேருந்து கிராமப்புறம் வழியாக இயக்கப்பட்டு வந்ததால் பொதுமக்கள் பயனடைந்தனா். இதுகுறித்து சாத்தான்குளம் வா்த்தக சங்க செயலா் செல்வராஜ் மதுரம் கூறுகையில், முதலூா் உள்ளிட்ட கிராம பகுதியில் இருந்து காலை, மாலை நேரத்தில் சாத்தான்குளம் பகுதிக்கு வந்துசெல்ல இந்தப் பேருந்து பெரும் உதவியாக இருந்தது. முதலூா் வழியாக இயக்கப்பட்ட அரசு பேருந்து தடம் எண் 165 சி பேருந்தை மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள், மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.