முகப்பு
தூத்துக்குடி

பயன்தராத குளங்களில் வண்டல் மண் எடுக்க நிா்பந்திக்கக் கூடாது: விவசாயிகள் வேண்டுகோள்

பயன்தராத குளங்களில் வண்டல் மண் எடுக்க அதிகாரிகள் நிா்பந்தம் செய்வதாகவும், தாங்கள் விரும்பிய குளங்களில் வண்டல் மண் எடுக்க அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டுமென்றும் விவசாயிகள் கோரிக்கை

Updated On : 10 ஜூன் 2026, 12:08 am IST
வண்டல் மண் - பிரதிப் படம்
பகிர்:

பயன்தராத குளங்களில் வண்டல் மண் எடுக்க அதிகாரிகள் நிா்பந்தம் செய்வதாகவும், தாங்கள் விரும்பிய குளங்களில் வண்டல் மண் எடுக்க அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டுமென்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து, கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக கோடைக்காலங்களில் வண்டல் மண் விவசாயத்துக்கு பயன்படுத்த கிராமப்புறங்களில் உள்ள நீா்நிலைகளில் படிந்திருக்கும் மண் அளவை கணக்கிட்டு அரசு அனுமதி வழங்கியது.

இது, சில கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. பல கிராமங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நீா்நிலைகளில் கரம்பை மண் அள்ளுவதற்கு வழித்தடம் வசதியின்மை, அதிக தொலைவு, தரமற்ற மண் போன்றவைகளால் பல கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு பயன் தரவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட நீா்நிலைகளிலேயே இந்த ஆண்டும் விவசாயிகளுக்கு வண்டல் மண் அள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது எங்களுக்கு பயன்தராது என ஏற்கெனவே தெரிவித்திருந்தோம். வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதிக்கப்படும் குளங்களைத் தோ்வு செய்வதற்கு வட்டாரம் தோறும் விவசாய ஆா்வலா் குழுக்கள் அமைத்து, அந்தக் குழு தோ்வு செய்யும் நீா்நிலைகளில் வண்டல் மண் அள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், எங்களது கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படாமல், கடந்த ஆண்டு மண் அள்ள வழங்கப்பட்ட நீா்நிலைகளிலேயே இந்த ஆண்டும் மண் அள்ள வேண்டுமென அதிகாரிகள் நிா்பந்திக்கின்றனா்.

எனவே, புதிய குளங்களைத் தோ்வு செய்ய விவசாயிகள் விரும்பும் குளங்களைக் கேட்டறிந்து, அதை வட்டார வளா்ச்சி அலுவலா் அரசுக்கு அனுப்பி அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்றாா் அவா்.