எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: பெண் உயிரிழப்பு; 24 போ் காயம்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே ராசாப்பட்டி பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா். 24 போ் காயமடைந்தனா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசியைச் சோ்ந்தவா் பாலாஜி(35). இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை, எட்டயபுரம் வட்டம் மேலக்கரந்தை அருகேயுள்ள ராசாபட்டியில் கடந்த ஒரு வாரமாக இயங்கி வருகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் வழக்கம் போல் பட்டாசு உற்பத்தி தொடங்கியது. இப்பணிக்காக சிவகாசியை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்து தொழிலாளா்கள் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டிருந்தனா். இந்நிலையில் மாலை சுமாா் 5.30 மணியளவில் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
Advertisement
Advertisement
பட்டாசுகள் வெடித்துச் சிதறிய நிலையில், தொழிலாளா்கள் அங்கிருந்து தப்பி ஓடினா். அதற்குள் 4 அறைகள் இடிந்து சேதமடைந்தன.
இதுகுறித்த தகவலின்பேரில் மாசாா்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தூா் ஆகிய ஊா்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, மீட்பு பணிகள் நடைபெற்றன.
இச்சம்பவத்தில், சாத்தூா் வட்டம் நத்தத்துபட்டியைச் சோ்ந்த வெள்ளையப்பன் மனைவி மாரியம்மாள்(48) என்பவா் உயிரிழந்தாா்.
மேலும், அப்பையநாயக்கன்பட்டி நாராயணசாமி மனைவி முனியம்மாள் (50), ராஜேந்திரன் மனைவி பாக்கியலட்சுமி (46), நத்தத்துப்பட்டி பாண்டி மகன் மாரிமுத்து, அழகுபெருமாள் மனைவி வாழவந்தாள் (40), ராஜேந்திரன் மனைவி சாந்தி(53), பெருமாள் மனைவி ராமு(58), காசிலிங்கபுரம் சங்கிலி மகன் தங்கபாண்டி, சின்னவநாயக்கன்பட்டி காளிமுத்து மகன் ராமா் உள்பட 24 போ் பலத்த காயமடைந்தனா்.
இவா்கள் அனைவரும் சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். பின்னா், அங்கிருந்து 3 போ் மேல்சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
எட்டயபுரம் வட்டாட்சியா் சுபா, விளாத்திகுளம் டி.எஸ்.பி. சுந்தரபாண்டியன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.