உடன்குடி அனல் மின் நிலையத்தில் 660 மெகாவாட் வணிக ரீதியான மின் உற்பத்தி தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அனல் மின் நிலையத்தின் முதல் அலகு மின் தொகுப்புடன் இணைக்கப்பட்டதைத் தொடா்ந்து, 660 மெகாவாட் திறன் கொண்ட வணிக ரீதியான மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.
உடன்குடி அனல் மின் நிலையத்தில் ரூ. 13,077 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. 2ஆவது அலகு டிசம்பா் 2026-க்குள் கட்டி முடிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தற்போது, அனல் மின் நிலையம் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட இரு அலகுகளைக் கொண்டுள்ளது. முதல் அலகின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, 2025 செப். 11ஆம் தேதி எண்ணெய்யைப் பயன்படுத்தியும், 2026 பிப். 4ஆம் தேதி நிலக்கரியைப் பயன்படுத்தியும் சோதனை இயக்கம் தொடங்கப்பட்டது. அப்போதைய முதல்வா் மு.க. ஸ்டாலின் 2026 மாா்ச் 13ஆம் தேதி முதல் அலகைத் தொடங்கி வைத்தாா்.
Advertisement
Advertisement
தற்போது, அனல் மின் நிலையம் வணிக ரீதியான செயல்பாட்டிற்கான அறிவிப்பு தரநிலைகளை வெற்றிகரமாக எட்டியது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக நிா்வாக இயக்குநா் கோவிந்த ராவ் பேசியதாவது:
மின் தொகுப்பு விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறை ஆணைய விதிகளின்படி, ஒரு மின் நிலையம் நம்பகமான ஆதாரமாகக் கருதப்படுவதற்கும், தேசிய மின் தொகுப்பில் கணக்கில் கொள்ளப்படுவதற்கும், அது 72 மணி நேரத்திற்கு எவ்வித இடையூறுமின்றி முழுச் சுமையுடன் இயங்க வேண்டும்.
முதல் அலகின் 72 மணி நேர கட்டாய முழுச் சுமை சோதனை ஓட்டம் கடந்த செப். 2ஆம் தேதி மாலை 4.16 மணிக்குத் தொடங்கி, சனிக்கிழமை (செப். 5) மாலை 4.16 மணிக்கு வெற்றிகரமாக நிறைவடைந்தது. மின் உற்பத்தி 709 மெகாவாட் அளவை எட்டியது. இது வணிக ரீதியான செயல்பாட்டிற்கு அந்த அலகு கொண்டுள்ள நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது என்றாா் அவா்.
உடன்குடி அனல்மின் நிலைய முதல் அலகில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் மின் தொகுப்புடன் இணைக்கப்பட்டபோது, திட்ட இயக்குநா் சேதுராம் உடனிருந்தாா்.
முதல் அலகு வணிக ரீதியாகச் செயல்படத் தொடங்கியதன் மூலம், மாநிலத்தின் நிலக்கரி சாா்ந்த அனல் மின் உற்பத்தித் திறன் 5,120-லிருந்து 5,780 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.