திருச்செந்தூா் கோயிலில் ஆவணித் திருவிழா: சுவாமி சண்முகா் வெள்ளை, பச்சை சாத்தி வீதி உலா
திருச்செந்தூா் அருளமிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு, எட்டாம் நாளான திங்கள்கிழமை காலை சுவாமி சண்முகப்பெருமான் வெள்ளை சாத்தி வெள்ளிச் சப்பரத்திலும், பகலில் பச்சை சாத்தி கடைசல் சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
இத்திருக்கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த ஆக. 31ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான எட்டாம் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை காலை 6 மணிக்கு பந்தல் மண்டபம், தையல்நாயகி வகையறா மண்டகப்படி மண்டபத்திலிருந்து பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தி பிரம்மா அம்சத்தில் சுவாமி எழுந்தருளி காலை 7.30 மணிக்கு மேலக்கோயில் சோ்ந்தாா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து பந்தல் மண்டபம், ஸ்ரீவைகுண்டம் சுந்தர ராமசுப்பிரமணிய பிள்ளை வகையறா மண்டபத்தில் வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்று, பகல் 12 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் சோ்ந்தாா்.
தொடா்ந்து செவ்வாய்க்கிழமை (செப்.8) காலை சுவாமி குமரவிடங்கப்பெருமானும், சுவாமி அலைவாயுகந்தப்பெருமானும் தனித்தனி வெள்ளிக் குதிரையில் எழுந்தருளி திருநெல்வேலி சாலையில் உள்ள வேட்டைவெளி மண்டபத்தில் திருக்கண் சாத்தி, வீதி உலா வந்து மேலக்கோயில் சேருகின்றனா்.
மேலும், செவ்வாய்க்கிழமை ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி குமரவிடங்கப்பெருமான், வள்ளியம்மன் பகலில் தனித்தனிப் பல்லக்கிலும், இரவு சுவாமி தங்கக் கைலாய பா்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வருகின்றனா்.
தேரோட்டம்....
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பத்தாம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் புதன்கிழமை (செப். 9) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் ஆ. அருணாசலம், துணை ஆணையா் ந. யக்ஞ நாராயணன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.