திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை மின்னஞ்சலில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் அதிகாரபூா்வ மின்னஞ்சல் முகவரிக்கு திங்கள்கிழமை நண்பகல் 12 மணியளவில் ஒரு மின்னஞ்சல் வந்தது.
அதில், திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை சற்று நேரத்தில் வெடிக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து நீதிமன்ற அலுவலா்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு போலீஸாா் மற்றும் மாநகர போலீஸாா், இரண்டு குழுக்களாக மெட்டல் டிடெக்டா் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனையிட்டனா்.
அதில் வெடி பொருள்கள் கைப்பற்றப்படவில்லை. மின்னஞ்சலில் வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து மிரட்டல் வந்த மின்னஞ்சல் முகவரி குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.