முகப்பு
திருச்சி

கட்சிகனே கொஞ்சம் கவனியுங்கள்! வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னைக்கு தீர்வு உண்டா?

Updated On : 31 மார்ச் 2026, 3:45 am IST
வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் - கோப்புப் படம்
பகிர்:

மன்னர் காலத்தில் கோயிலில் பணிப் புரியும் வித்வான்கள், நாட்டியக்காரர்கள், தூய்மைப்பணியாளர்கள் என பலருக்கும் கோயில் நிலங்கள் வழங்கப்பட்டு அதில் உழவுப்பணியில் கிடைக்கும் வருவாயில் ஒரு குறிப்பிட்ட தொகையை தங்களுக்கு வைத்துக் கொண்டு மீதம் உள்ளவற்றை கோயிலின் பராமரிப்புக்கு வழங்கி வந்தனர். நாளடைவில் மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்சுளால் கோயில் நிலங்கள் அதிகாரிகளின் தவறான நிர்வாகத்தினால் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு பட்டா நிலங்களாக உருவாகின.

அந்த வகையில் கரூரில் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டது கண்டறியப்பட்டன. மேலும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருத்தொண்டர் சபையின் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் என்பவர் கோயிலுக்கு உரிய வருவாய் கிடைக்கும் வகையில் கோயில் நிலத்தில் குடியிருப்பவர்கள் கோயிலுக்கு குத்தகை செலுத்தும் வகையிலோ அல்லது வாடகை செலுத்தும் வகையிலோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கடந்த 2018-இல் வழக்குத் தொடர்ந்தார்.

இதையடுத்து நீதிமன்றமும் கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களை குத்தகை மற்றும் வாடகை தாரர்களாக மாற்ற வேண்டும் அவ்வாறு மாற்றுவதற்கு மறுப்பவர்களை உடனே அகற்றவேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கோயில் நிலங்களில் இருப்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் வீடுகள், கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கியது இந்து சமய அறநிலையத் துறை.

Advertisement

Advertisement

இருப்பினும் நோட்டீஸை யாரும் கண்டுகொள்ளாததால் நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவின் விளைவால் அண்மைக் காலமாக கோயில் நிலத்தில் உள்ள வீடுகளுக்கும் கடைகளுக்கும் 'சீல் வைக்கும் பணிகளை அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

இருப்பினும் அதிகாரிகள் 'சீல்' வைக்க வரும்போது. பாதிக்கப் பட்ட பொதுமக்களுடன் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் கைகோத்துக்கொண்டு அதிகாரிகளுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த இயலாத நிலையில் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், அரசியல் கட்சியினர் கோயில் நிலத்தை கோயில் பெயரில் ஒரு வகையாகவும், கோயில் ஊழியர்களுக்கு வழங்கப் பட்ட நிலம் ஒரு வகையாகவும் உள்ளிட்ட மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு கோயில் பெயரில் உள்ள நிலத்தை தவிர மற்ற பெயரில் இருக்கும் நிலங்களை பாதிக்கப்பட்டவர்கள் பெயருக்கு மாற்றித் தருகிறோம் எனக் கூறிவந்தனர்.

மேலும், இதுதொடர்பாக முதல்வரிடம் பேசி அதற்கான சட்ட வல்லுநர்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்ததால், வெண்ணைமலை கோயில் நிலப்பிரச்னை சற்று கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. ஆனால், தேர்தல் முடிவுக்குப் பின் புதிய ஆட்சியிலாவது தங்களுக்கு தீர்வு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

மேலும், இப்பிரச்னையில் இருந்து முழு தீர்வு பெற்று தருவேன் என உறுதியளிக்கும் வேட்பாளருக்கே எங்கள் வாக்கு என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.