நீதிமன்றம் உத்தரவிட்டும் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றாத மாவட்ட நிர்வாகம்
அரியலூர் குரும்பன்சாவடி வரத்துவாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, கடந்த 2016 -ல் நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரியலூர் குரும்பன்சாவடி வரத்துவாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, கடந்த 2016 -ல் நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரியலூரில் பிரதான ஏரியாக செட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியின் வரத்து வாய்க்கால் செந்துறை சாலை குரும்பன்சாவடியில் உள்ளது. இந்த வரத்து வாய்க்கால் ஐந்தொழில் விநாயகர் கோயில் தெரு, ரவுத்தான்பட்டி வழியாக அரியலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள செட்டி ஏரியை சென்றடைகிறது. மேலும், ஐயப்பன் ஏரி, சித்தேரி, அம்மாங்குளம் ஏரி உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட ஏரிகளின் நீர் ஆதாரமாக இந்த வரத்து வாய்க்கால் உள்ளது.
இந்த வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமித்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் குடியிருப்பு வீடுகளைக் கட்டியுள்ளது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு சமூக ஆர்வலர் ஆர்.சங்கர் தொடுத்த பொதுநல வழக்கில், வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் ஆதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என கடந்த 28.7.2016 இல் முதன்மை நீதிபதி சஞ்சய் கிசான் கவுல் உத்தரவிட்டார். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. ஆக்கிரமிப்பு குறித்து மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு குடிமாற்று வாரியத்திடம் அரியலூர் நகர வளர்ச்சி சங்கத்தினர் புகார் தெரிவித்தும் பலனில்லை.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆர்.சங்கர் மேலும் கூறியது:
குரும்பன்சாவடி பகுதியில் திருச்சி வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான நிலம் சுமார் 48 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. முறைகேடாக செட்டி ஏரியின் நீராதாரமான குரும்பன்சாவடி வரத்து வாய்க்கால்,100 அடி சாலை, பூங்கா சாலை, விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகளை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி பயனாளிகளிடம் அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு வடிகால் வாரியம் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த முதன்மை நீதிபதி சஞ்சய் கிசான் கவுல், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும், மாவட்ட வருவாய் அதிகாரிக்கும் உத்தரவிட்டார். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, வரத்து வாய்க்காலை மீட்டு தூர் வாரினால் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பயனடையும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.