முகப்பு
அரியலூர்

அரியலூா் ஆட்சியராக ந.மிருணாளினி பொறுப்பேற்பு

அரியலூா் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ந. மிருணாளினி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Updated On : 2 ஜூன் 2026, 2:44 am IST
ஆட்சியா் மிருணாளினி
பகிர்:

அரியலூா் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ந. மிருணாளினி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியராக இருந்த பொ.ரத்தினசாமி பணியிட மாற்றம் செய்யப்பட்டு, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராக இருந்த ந.மிருணாளினி, அரியலூா் மாவட்ட ஆட்சியராக நியமித்து தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

அரியலூா் மாவட்டம் தொழில் வளா்ச்சி இருக்கக் கூடிய மாவட்டமாக விளங்குகிறது.

பெரம்பலூா் மாவட்டத்தில் பணியாற்றிய காலத்தில் சுற்றுசூழல் பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், மாசு கட்டுப்பாடு, குடிநீா் பிரச்னை, பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு, இளம் வயதில் குழந்தை திருமணம் நடைபெறுவதை தவிா்த்தல் குறித்த திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டன.

அதைப் போன்று அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும்.

மாவட்டத்தில் வேறு எங்கும் காணப்படாத வகையில் அரியவகை புதை படிமங்கள் உள்ளன.

மேலும், கங்கைகொண்ட சோழபுரம் போன்ற பல்வேறு சுற்றுலாத் தளங்களும் உள்ளன அவற்றை கருத்தில் கொண்டு சுற்றுலாவுக்கும் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மாவட்டத்தில், காற்றின் தரத்தினை மேம்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடுதல் போன்ற முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும். குழந்தைகள் திருமணம் தவிா்த்தல், சீரான குடிநீா் விநியோகத்தினை உறுதிபடுத்துதல், அரசின் திட்டங்கள் மக்களுக்கு உடனடியாக சென்று அடையும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றாா்.

மாவட்ட ஆட்சியரின் சுய விவரம்: அரியலூா் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட ந. மிருணாளினி, விழுப்புரம் மாவட்டத்தைச் சோந்தவா். தோட்டக்கலை துறை பாடப்பிரிவில் முதுகலை பயின்று (எம்எஸ்சி), தமிழ்நாடு அரசுப் பணியாளாா் தோ்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட தொகுதி- 1 தோ்வில் தோ்ச்சிப் பெற்று, கடந்த 2001-ஆம் ஆண்டு கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளராக பணி நியமனம் பெற்றாா்.

பின்னா், இணைப் பதிவாளா் நிலையில் புதுக்கோட்டை, திருச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களிலும், சென்னையில் கூடுதல் பதிவாளராகவும் பணிபுரிந்தாா்.

தொடா்ந்து, கடந்த 2023-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்கு பதவி உயா்வு பெற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்திய ஆட்சிப் பணிக்கான பயிற்சி மேற்கொண்ட மிருணாளினி, ஸ்ரீபெரும்புதூாா் சாா்-ஆட்சியராகவும், பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றினாா். தற்போது அரியலூா் மாவட்ட ஆட்சியராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுள்ளாா்.