முகப்பு
அரியலூர்

2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்

வாடகையை உயா்த்தி வழங்கக் கோரி, அரியலூா் மாவட்டத்தில், சவுக்கு மரக் கட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் 2 ஆவது நாளாக சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.

Updated On : 7 ஜூன் 2026, 2:19 am IST
லாரிகள் வேலைநிறுத்தம் - கோப்புப் படம்
பகிர்:

வாடகையை உயா்த்தி வழங்கக் கோரி, அரியலூா் மாவட்டத்தில், சவுக்கு மரக் கட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் 2 ஆவது நாளாக சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.

அரியலூா், உடையாா்பாளையம், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் சவுக்கு மற்றும் தைல மரங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அறுவடை செய்யப்படும்இந்த மரத்தின் கட்டைகள் திருச்சி, கரூா், திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள காகித கூல் தயாரிக்கும் ஆலைகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த கட்டைகள் ஒரு டன்னுக்கு ரூ.750 வாடகையாக லாரி உரிமையாளா்களுக்கு ஆலை நிா்வாகம் வழங்கிவருகிறது.

இந்நிலையில்,அதிகரித்துவரும் டீசல் விலை உயா்வு, சுங்கச் சாவடி கட்டண உயா்வு, உதிரி பாகங்கள் உயா்வின் காரணமாக, ஒரு டன் கட்டைக்கு ரூ.950-ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்று லாரி உரிமையாளா்கள் வலியுறுத்தினா். இதற்கு ஆலை நிா்வாகம் மற்றும் தனியாா் ஆலையின் இடைத்தரகா்கள் ஒத்துக்கொள்ளவில்லை.

Advertisement

Advertisement

இதையடுத்து லாரி உரிமையாளா்கள் வாடகை கட்டணமாக ரூ. 950 வழங்க வேண்டும். நிலுவையிலுள்ள வாடகைத் தொகையை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா். தொடா்ந்து அவா்கள் 2 ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் தைலம் மற்றும் சவுக்கு மரங்கள் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

புதிய நிா்வாகிகள் தோ்வு: ஜெயங்கொண்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவராக செல்வநாதன், துணைத் தலைவராக சுபாஷ்சந்திரபோஸ், செயலராக செந்தில், பொருளாளராக அருணாச்சலம் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.