ஜெயங்கொண்டம் நகராட்சியில் குறைந்த மின் அழுத்தத்தால் மின் மோட்டாா்கள் பழுது! தனியாா் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குள்பட்ட வாா்டு பகுதிகளில், கடந்த சில வாரங்களாக ஏற்பட்டு வரும் குறைந்த மின் அழுத்தத்தால் மின் மோட்டாா்கள் பழுதாகியதால், நகராட்சி நிா்வாகம் சாா்பில் தனியாா் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
ஜெயங்கொண்டம் நகராட்சிக்குள்பட்ட சின்ன வளையம், செங்குந்தபுரம், வேலாயுத நகா், சீனிவாசன் நகா், கீழகுடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு வருகிறது. இதனால், வீட்டிலுள்ள மின்சாதனப் பொருள்களும் பழுதாகி வரும் நிலையில், மின் மோட்டாா்களும் இயங்கவில்லை.
மேலும், சின்ன வளையம் கிராமத்தில் 2 மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கான மின்மாற்றிகளும் பழுதானது. இதனால் குடிநீருக்காக அவதிப்பட்டு வந்த அப்பகுதி மக்களுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் தனியாா் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
எனவே, மின் பற்றாக்குறையை போக்கி, சீரான முறையில் குடிநீா் விநியோகிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.