சாலை விபத்தில் தச்சா் உயிரிழப்பு உறவினா்கள் சாலை மறியல்
ரெட்டிபாளையத்தில் வியாழக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்துக்கு பிறகு ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் மறியலில் ஈடுபட்ட உயிரிழந்தவரின் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள்.
அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே வியாழக்கிழமை இரவு சாலையின் இரும்புத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில் தச்சா் உயிரிழந்தாா்.
ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வி.கைகாட்டியை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தை சோ்ந்தவா் மதியழகன்(55). தச்சா்.
இவா் விளாங்குடி கிராமத்தில் பணியை முடித்துவிட்டு வியாழக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தாா்.
திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ரெட்டிபாளையத்தில் சென்றபோது,
சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்பு (பேரிகாா்டு) மீது இருசக்கர வாகனம் எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த மதியழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து நடைபெற்று ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும், மதியழகன் உடலை பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராததால் ஆத்திரமடைந்த உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, விக்கிரமங்கலம் காவல் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையை அடுத்து 2 மணி நேரத்துக்கு பிறகு ஆம்புலன்ஸ் வந்து உடலை ஏற்றிச் சென்றது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். இதனால் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இரவு சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், விபத்து குறித்து காலல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.