இந்து முன்னணியினர் இருசக்கர வாகனப் பேரணி
தமிழகத்தில் திருக்கோயில்களுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் காணாமல் போன சிலைகளை மீட்கக் கோரி, கரூரில் இந்து முன்னணி சார்பில்
தமிழகத்தில் திருக்கோயில்களுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் காணாமல் போன சிலைகளை மீட்கக் கோரி, கரூரில் இந்து முன்னணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.
தமிழகத்தில் இந்து கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்த பிறகு, கடந்த 60 ஆண்டுகளில் 47,0000 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், 7000 சிலைகள் கடத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் 1700 சிலைகள் போலியாக உள்ளதாகவும், இதை வைத்து பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் கூறி, இந்து முன்னணி சார்பில் கடந்த 12 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் இருசக்கர வாகனப் பேரணி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கரூரை அடுத்துள்ள வெங்கமேடு வெண்ணெய்மலை பகுதியிலுள்ள முருகன் கோயிலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இரு சக்கர வாகனப் பேரணி, வெங்கமேடு, சர்ச் கார்னர், அரசு மருத்துவமனை வழியாகச் சென்று கரூர் அருள்மிகு கல்யாணபசுபதீசுவரர் கோயிலில் நிறைவடைந்தது. பேரணிக்கு இந்து முன்னணியின் மாவட்டப் பொருளாளர் ரமேஷ் தலைமை வகித்தார். திருச்சி மண்டலச் செயலர் கனகராஜ், மாநிலச் செயலர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர். 50-க்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர். இரு சக்கர வாகனப் பேரணி முடிவில், கோரிக்கை மனுவை கோயில் வளாகத்தில் உள்ள உண்டியலில் செலுத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.