பயனாளிகள் 214 பேருக்கு ரூ.11.83 லட்சம் நலத்திட்ட உதவி
கிருஷ்ணராயபுரம் அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் விழாவில் 214 பயனாளிகளுக்கு ரூ.11,83,960 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் வழங்கினார்.
கிருஷ்ணராயபுரம் அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் விழாவில் 214 பயனாளிகளுக்கு ரூ.11,83,960 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் வழங்கினார்.
கிருஷ்ணராயபுரம் வட்டம், கட்டளை குறுவட்டத்திற்குள்பட்ட சேங்கல் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட நிறைவுநாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் பேசியது: பொதுமக்கள் அரசின் திட்டங்களை முழுவதுமாக அறிந்து கொண்டு பெறுவதற்கும், எந்தெந்த துறை அலுவலகங்களை அணுகுவது, எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்து அனைவரும் அறிய இம்முகாம் வாய்ப்பாக அமைகின்றன. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் மானாவாரி பயிர்செய்யும் விவசாயிகள் அரசின் தரமான விதைகளை மானியத்தில் பெற்று மகசூல் செய்ய தயாராக இருக்க வேண்டும். அத்துடன் தங்களது விளைநிலத்தில் மண் பரிசோதனை செய்து அதற்கேற்றாற் போல பயிர் செய்ய வேண்டும். மழைநீரை சேகரிக்க அனைவரும் முன்வர வேண்டும். மழைக்காலம் தொடங்குவதால் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து, வருவாய்த் துறை சார்பில் 4 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 86 பேருக்கு பட்டா நகல், 61 பேருக்கு ரூ.9.51 லட்சம் மதிப்பில் வீட்டுமனை செய்து தனிப்பட்டா வழங்குதல் உள்பட 214 பயனாளிகளுக்கு ரூ.11,83,960 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, வருவாய் கோட்டாட்சியர் லியாகத், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் த.குமரேசன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் இளங்கோவன், சுகாதாரப் பணிகளின் இணை இயக்குநர் நிர்மல்சன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஜான்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் மல்லிகா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விஜயா, வட்டாட்சியர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமையொட்டி, வேளாண், தோட்டக்கலை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், தோட்டக் கலைத்துறை, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் சிறு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.