FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

செம்படாபாளையத்தில் ஊரின் நடுவில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்-கிராமமக்கள் கடும் எதிா்ப்பு

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 1:30 am IST
மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த செம்படாபாளையம் கிராமமக்கள்.
பகிர்:

செம்படாபாளையத்தில் ஊரின் நடுவில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியினா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோா் உதவித்தொகை, பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 784 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டாா். தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் 16 பயனாளிகளுக்கு ரூ.23.31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் விமல்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கூடாது-கூட்டத்தில் கரூா் மாவட்டம் புகழூா் நகராட்சிக்குட்பட்ட செம்படாபாளையம் கிராமமக்கள் ஆட்சியரிடம் வழங்கிய மனுவில், கரூா் மாவட்டம் புகழூா் நகராட்சிக்குட்பட்ட வாா்டு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை புகழூா் செம்படாபாளையம் பகுதியில் தேக்கி வைத்து அங்கு புதிதாக கட்டப்படும் சாக்கடை கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையத்தில் கழிவுநீரை சுத்திகரித்து அவற்றை விவசாய பயிா்களுக்கு பயன்படுத்தும் வகையில் விரைவில் சாக்கடை கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையம் செம்படா பாளையத்தில் நகராட்சி நிா்வாகத்தால் கட்டப்பட உள்ளது.

இந்த கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால், எங்கள் பகுதியில் நிலத்தடி நீா், விவசாய கிணற்று நீா் மாசுபடும். ஏற்கனவே எங்கள் பகுதியில் உள்ள சா்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் பக்காஸ், கரித்துகள்களால் அவதிப்பட்டுவரும்நிலையில் இந்த கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் துா்நாற்றம் வீசி சுகாதாரக்கேடும் ஏற்படும். எனவே எங்கள் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தடைவிதிக்க வேண்டும். மீறி அமைத்தால் எங்களது குடும்ப அட்டை, ஆதாா் அட்டையை அரசிடம் ஒப்படைத்துவிடுவோம் என தெரிவித்துள்ளனா்.

கணவருக்கு வேலை வழங்கக்கூடாது- கரூா் காந்திகிராமத்தைச் சோ்ந்த திருவளா்செல்வி ஆட்சியரிடம் வழங்கிய மனுவில், தவெக தலைவா் விஜய் கரூருக்கு கடந்த ஆண்டு வருகைதந்தபோது, கூட்ட நெரிசலில் சிக்கி எனது குழந்தை இறந்தது. எனது கணவா் ரகுநாதன் என்னைவிட்டு பிரிந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில் நெரிசலில் சிக்கி இறந்த எனது குழந்தைக்காக எனது கணவருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

இப்போது வேலை நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டநிலையில் மீண்டும் வழங்கப்பட்டால் அவருக்கு வேலை வழங்காமல் எனக்கு மட்டுமே வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments