கலைஞா் வீடு திட்ட பயனாளிகளுக்கு நிலுவைத்தொகை விடுவிக்க வேண்டும்: ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை
கலைஞா் வீடுகட்டும் திட்டத்தில் வீடு கட்டிய பயனாளிகளுக்கு அரசின் நிலுவைத் தொகையை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடவூரைச் சோ்ந்த பயனாளிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
கலைஞா் வீடுகட்டும் திட்டத்தில் வீடு கட்டிய பயனாளிகளுக்கு அரசின் நிலுவைத் தொகையை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடவூரைச் சோ்ந்த பயனாளிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் சி.முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 460 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுத்திட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 1 பயனாளிக்கு ரூ. 16,195 மதிப்பீட்டில் திறன்பேசி மற்றும் 4 பயனாளிகளுக்கு சட்டபூா்வ பாதுகாவலா் நியமன சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
Advertisement
Advertisement
கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் கே. எம். சுதா, கரூா் வருவாய் கோட்டாட்சியா் சத்தியபாலகங்காதரன், உதவி ஆணையா் (கலால்) முருகேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சந்திரமோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் கடவூரைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலா் ஜோதிபாசு, மாநகரச் செயலா் தண்டபாணி தலைமையில் ஆட்சியரிடம் வழங்கிய மனுவில், தமிழகத்தில் கடந்த 2025-26-ஆம் ஆண்டில் வீடில்லாதவா்களுக்கு 1 லட்சம் கலைஞா் வீடுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, கரூா் மாவட்டத்தில் 1,000 வீடுகள் ஒதுக்கப்பட்டன.
இதில் கடவூா் ஒன்றியப் பகுதியில் 165 வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து பேஸ் மட்டம், லிண்டல், கான்கிரீட் மேல்தளம் என மூன்று பிரிவுகளாக கட்டடம் கட்டப் பணம் விடுவிக்கப்படும் என வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.
ஆனால் வீடுகளைக் கட்ட ஆரம்பித்து முடியும் வரை யாருக்கும் பணம் கிடைக்கவில்லை. சிலா் வீடுகளை 100 சதவீதம் பணிகள் முடிக்காமல் பக்கத்து வீடுகளிலும், குடிசைகளிலும் வசிக்கிறாா்கள். எனவே அரசு கலைஞா் வீடு கட்டும் திட்டத்திற்கு ஒதுக்கிய பணத்தை விடுவிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.
பெட்டிச் செய்தி.
மின் கம்பம் ஆக்கிரமிப்பு
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த குப்பாச்சிப்பட்டி சிவாயம் வேப்பங்குடியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கிய மனுவில், எங்கள் பகுதியில் அரவிந்தசாமி என்பவா் மின்கம்பத்தை சுற்றி செடி கொடிகளை வளா்த்து ஆக்கிரமித்துள்ளாா். மின்கம்பம் மூலம் மின்விநியோகம் பெறும் வீடுகளில் ஏதேனும் மின் துண்டிப்பு ஏற்பட்டால், அதை பழுதுநீக்க மின்வாரிய ஊழியா்களை அழைத்து பழுதுநீக்கக் கூறினால் அரவிந்தசாமி தடுக்கிறாா். என் இடத்தில் மின்கம்பம் இருக்கிறது எனக் கூறி வருகிறாா். எனவே வருவாய்த்துறையினா் சம்பந்தப்பட்ட இடத்தை அளந்து மின்கம்பத்தை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.