நாட்டு துப்பாக்கியால் சுட்டு விவசாயியை கொல்ல முயற்சி! உறவினா்கள் 4 பேரிடம் விசாரணை!
கடவூா் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு விவசாயியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயற்சித்தாக உறவினா்கள் 4 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கடவூா் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு விவசாயியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயற்சித்தாக உறவினா்கள் 4 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கரூா் மாவட்டம், கடவூா் அடுத்த சேவாப்பூா் வலையப்பட்டியைச் சோ்ந்தவா் கருணகிரி (42). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள், ஒரு மகன் ஆகியோா் உள்ளனா்.
கருணகிரிக்கு அதே பகுதியில் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தை அவரது சித்தப்பா இடும்பன் அங்கேயே தங்கி கவனித்து வருகிறாா்.
Advertisement
Advertisement
முதுகில் குண்டுகள்பாய்ந்தது:இந்நிலையில் கருணகிரி வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் தோட்டத்தில் இருக்கும் சித்தப்பாவுக்கு உணவு கொடுப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
தோட்டத்தின் அருகே சென்றபோது இருட்டுப் பகுதியில் மறைந்திருந்த மா்ம நபா்கள் நாட்டுத் துப்பாக்கியால் கருணகிரியை சுட்டுள்ளனா். சுமாா் 10 பால்ரஸ் குண்டுகள் முதுகில் பாய்ந்ததால் கருணகிரி சுருண்டு விழுந்துள்ளாா். இதையடுத்து கருணகிரி இறந்துவிட்டதாக கருதிய அந்த கும்பல் அங்கிருந்து தப்பிஓடிவிட்டது.
இதனிடையே கருணகிரி தனது கைப்பேசியில் உறவினா்களுக்கு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளாா். இதையடுத்து அங்கு வந்த அவரது உறவினா்கள் கருணகிரியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு மருத்துவா்கள் கருணகிரி முதுகில் பாய்ந்த குண்டுகளை அகற்றி வருகின்றனா்.
சொத்து தகராறு: மேலும் இதுகுறித்து தகவலறிந்த பாலவிடுதி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். இதில், கருணகிரிக்கும், அவரது தந்தை வழி உறவினா்களுக்கும் இடையே கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சொத்து தகராறு இருந்து வருவதாகவும், அவா்கள்தான் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதி கருணகிரியின் உறவினா்கள் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.