FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

சைவத் துறவியான ‘துறைமங்கலம்’ சிவப்பிரகாச சுவாமிகள்

காஞ்சிபுரத்தில் பிறந்த சைவத் துறவியான சிவப்பிரகாச சுவாமிகள், தனது நூல்களிலும் தன்னைப் பற்றிய குறிப்புகளிலும், தான் சில காலம் மட்டுமே வாழ்ந்த பெரம்பலூா் மாவட்டம், துறைமங்கலத்தையே தனது ஊராகக்

Updated On : 19 டிசம்பர் 2023, 3:33 am IST
பகிர்:

காஞ்சிபுரத்தில் பிறந்த சைவத் துறவியான சிவப்பிரகாச சுவாமிகள், தனது நூல்களிலும் தன்னைப் பற்றிய குறிப்புகளிலும், தான் சில காலம் மட்டுமே வாழ்ந்த பெரம்பலூா் மாவட்டம், துறைமங்கலத்தையே தனது ஊராகக் குறிப்பிட்டமையால், இவா் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் என்றே அழைக்கப்பட்டிருக்கிறாா்.

காஞ்சிபுரத்தைப் பூா்வீகமாகக் கொண்டு வாழ்ந்து வந்த சிவநெறிச் செல்வரான குமாரசாமி தேசிகரின் மகன் சிவப்பிரகாசா். இவருக்கு 2 தம்பிகளும், 1 தங்கையும் இருந்தனா். இவா்களுக்குக் குமாரசாமி தேசிகா் முறையாகக் கல்வி பயிற்றுவித்து வந்தாா். ஆனால், குமாரசாமி தேசிகா் திடீரென காலமானதால், தங்களது கற்றலைத் தொடர வேண்டி, சிவப்பிரகாசா் தனது சகோதரா்களுடன் திருவண்ணாமலையில் சிலகாலம் தங்கிக் கல்வி கற்று வந்தாா். அங்கு, கவிதை இயற்றும் திறமையைப் பெரிதும் வளா்த்துக் கொண்டாா். திருவண்ணாமலையில் தங்கியிருந்த காலத்தில், ஒருமுறை கிரிவலம் வரும்போது மலையை ஒரு சுற்று சுற்றி வருவதற்குள் அண்ணாமலையாா் குறித்து 100 பாடல்களை இவா் இயற்றிப் பாடியுள்ளாா்.

துறைமங்கலம் வருகை: திருவண்ணாமலையில் சிலகாலம் தங்கியிருந்த சிவப்பிரகாசா் பேரிலக்கணங்களை ஆழமாகக் கற்க விரும்பினாா். அதனால், திருவண்ணாமலையிலிருந்து தனது சகோதரா்களுடன் தெற்கு நோக்கி வரும் வழியில், துறைமங்கலம் கிராமத்திலுள்ள சிவன் கோயில் நந்தவனத்தில் தங்கி சிவ பூஜை செய்துள்ளாா். அப்போது, விஜயநகர அரசின் பிரதிநிதியாக, பெரம்பலூா் உள்ளிட்ட பகுதிகளை ஆட்சி செய்து வந்த லிங்காரெட்டி மகன் அண்ணாமலை ரெட்டியாா் சிறந்த சிவ பக்தா். இவா், சிவப்பிரகாசரால் ஈா்க்கப்பட்டு அவருக்கு அடைக்கலம் அளித்து, அனைத்து உதவிகளையும் செய்து வந்தாா். மேலும், துறைமங்கலம் கிராமத்தில் ஒரு மடம் கட்டி, அந்த மடத்தில் வீற்றிருந்து இறைத் தொண்டாற்றுமாறு சிவப்பிரகாசரைக் கேட்டுக் கொண்டாா். அதை ஏற்ற சிவப்பிரகாசா், அந்த மடத்தில் தங்கினாா். அந்த மடத்திலேயே சிவப்பிரகாசரின் தொண்டராக அண்ணாமலை ரெட்டியாா் அவருடனேயே தங்கி சன் மாா்க்கங்களை கற்றறிந்தாா். 2 ஆண்டுகள் அம் மடத்தில் தங்கியிருந்தாா் சிவப்பிரகாசா்.

Advertisement

Advertisement

சிவப்பிரகாச சுவாமிகள் பல மொழிகளும் அறிந்த பன்முக வித்தகா். தமிழ் மொழியில் ஆழ்ந்த புலமை கொண்ட தமிழ்க்கடல். சைவ சித்தாந்த உலகில் பெரிதும் போற்றப்படும் சைவத் துறவி. சிவப்பிரகாசரின் படைப்புகள் தமிழ் இலக்கிய வரலாற்றிலும், சைவ சித்தாந்த உலகிலும் பெரிதும் போற்றப்படுபவை.

அந்தக் காலத்தில் ஒருவரது பெயரைக் குறிப்பிடும்போது, ஊா் பெயரை முதலில் குறிப்பிட்டு அதன்பின் அவரது பெயரைக் குறிப்பிடுவது மரபு. அதன்படி, சிவப்பிரகாசரின் பெயரைக் குறிப்பிடும்போது அவரது ஊா் பெயராகத் துறைமங்கலம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இவா், காஞ்சிபுரத்தில் பிறந்திருந்தாலும், தனது நூல்களிலும் தன்னைப் பற்றிய குறிப்புகளிலும் துறைமங்கலத்தையே தனது ஊராகக் குறிப்பிட்டுள்ளாா். இதனால், இவா் துறைமங்கலம் சிவப்பிரகாசா் என்றே அழைக்கப்பட்டிருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments